ஹோட்டல் ஒன்றில் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தன் அறைக்குத் திரும்பினான் மூர்த்தி.
'பனகல் பார்க்கைக் கடந்து சென்ற ரிக்ஷா உஸ்மான் ரோடு பக்கமாகக் கோடம்பாக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மணி சுமார் எட்டுக்கு மேல் ஆகியிருக்கலாம். தெருவிலே பெண்களின் கூட்டம் குறைந்து விட்டது. காரியாலயங் களிலிருந்து நேரம் சென்று வீடு திரும்பும் ஆடவர் சிலரேதான் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தனர். இருபுறமும் மரங்கள் கவிந்திருந்த அந்தச் சாலையில் போகப் போக ஜனக்கூட்டம் அதிகமாக இல்லை. தன்னைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்ட ராதாவுக்குச் சற்று பயமாகத் தான் இருந்தது. தெரியாத்தனமாக அவள் அன்று கைகளில் நாலைந்து தங்க வளையல்களையும் கழுத்தில் முத்து ’நெக்லெஸை' யும் அணிந்து கொண்டு கிளம்பி வந்து விட்டாள்,
இரவு வேளையில் தனியாக ரிஷாவில் போவதை விட நடந்து செல்லலாமே என்று கூட அவளுக்குத் தோன்றியது. உள்ளத்தில் பரபரப்பும், பயமும் அதிகம் ஆக ஆக. அவள் உடல் பூராவும் வேர்த்துக் கொட்டியது . எதிரே கொஞ்ச தூரத்தில் யாரோ ஒருவர் வந்து கொண்டிருந்தார். கையில் ஒரு பிரம்பு வைத்திருந்தார் அவர். வழியில் போகிறவர் வருகிறவர்களை வெகு கூர்மையாகப் பார்த்துக்கொண்டே வந்தார் அவர். ராதா தன் இதயத் துடிப்பு நின்று விடுமோ என்று அஞ்சினாள். அவள் மனம் அப்படி வேகமாக அடித்துக் கொண்டது. பிரம்பு மனிதர் பக்கத்தில் வந்து விட்டார். வண்டிக்குள் உற்றுப் பார்த்துவிட்டு, ”என்ன அம்மா இது? வேளை சமயம் இல்லாமல் கடைக்குக் கிளம்பி விடுகிறாய் நீ!" என்று அதட்டிக்கொண்டே ரிக்ஷாவை மேலே போக விடாமல் நிறுத்தினார் சுவாமிநாதன்.
"நீங்களா?" என்றாள் ராதா, பெருமூச்சு விட்டபடி.
"நான் தான்! அம்மா எங்கேடா காணோம். இப்போ இருந்தாங்களே என்று ராமையாவைக் கேட்டால். 'பாண்டி பஜாருக்குப் போச்சு வளையல் வாங்கியாற' என்கிறான். இந்தக் காலத்துப் பெண்களுக்கு எதை நினைத்துக் கொண்டாலும் உடனே ஆக வேண்டும் என்கிற சுபாவம்தான் அதிகமாக இருக்கிறது. இப்படி எட்டு மணிக்குமேல் வளையல் வாங்க ஒண்டியாகக் கடைத் தெருவுக்குப் போவது அவசியமா என்று நினத்துப் பார்க்கிறதில்லை. வீட்டிலே யாருக்காவது ஆபத்தா? ஏதாவது மருந்து தேவையா? சமயம் பார்க்காமல் போக வேண்டியதுதான். இப்படி வளையலும் ரிப்பனும் வாங்க..." சுவாமிநாத சற்றுக் கடிந்தவாறு இவ்விதம் கூறிவிட்டு, நீ