பேச வேண்டும் பழக வேண்டும் என்கிற ஆவலைக் காண்பித்து கொள்ள வேயில்லை. இப்படி இருக்கையில் பெரியவர்களாகவே அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார்கள். காமாட்சிக்கு அன்று விசேஷமாக அலங்காரம் செய்திருந்தார்கள், பூக்கடையிலிருந்து வாங்கி வந்த ஜாதி அரும்பு களைப் பின்னலில் வைத்துத் தைத்திருந்தார்கள். காதுகளில் வைரக் கம்மல்களும், புல்லாக்கும், ஒட்டியாணமும் கழுத்தில் ஐந்தாறு வடங்கள் சங்கிலியும், காஞ்சிபுரம் பட்டுப் புடவையும் அணிந்து காமாட்சி தன் கணவனை நேருக்கு நேர் சந்திக்கப் புறப்பட்டாள்.
மாடியில் இருந்த அந்த அறையில் அவள் நுழைந்த போது, அவள் கணவன் உள்ளே சாய்வு நாற்காலியில் படுத்து அரைத் தூக்கத்தில் இருந்தான். காமாட்சி மெல்ல மெல்ல அடி வைத்து உள்ளே சென்றாள்; கணவன் பேசாமல் இருக்கவே, தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். பிறகு மெதுவான குரலில் ”எழுந்திருங்கள். முதுகை வலிக்கப் போகிறது. படுக்கையில் போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்" என்று அவனை எழுப்பினாள்.
அவன் கண் விழித்தான். எதிரில் அழகே உருவமாக நிற்கும் காமாட்சியைக் கண்டான். அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது. ”காமாட்சி" என்று ஆதுரத்துடன் அழைத்து. அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.
'உன்னை ஏமாற்றி விட்டேன்! உன்னுடன் நான் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். நிரந்தர நோயாளி. உளுத்துப்போன இந்த உடல் அதிக நாள் இருக்கப் போவதில்லை. வெளிப்பார்வைக்கு நான் நன்றாகத்தான் இருக்கிறேன். இருந்தாலும். காச நோய் என்னுடைய உடலை அரித்துக்கொண்டே வருகிறது. சீக்கிரத்தில் எல்லோரும் அதைப் புரிந்து கொள்வீர்கள்" என்றான்.
காமாட்சி கல்லாக உணர்வற்று நின்றாள். பதி னைந்து வருஷங்களுக்கு முன்பு காச நோயிலிருந்து மனித சமுதாயத்துக்கு விடுதலை கிடையாது என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். அந்த எண்ணமே அநேகம் பேரை- ஆரம்ப நோயாளிகளைக் கூட பலிவாங்கிவிட்டது.
அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது .