"பணத்துக்காக வியாதியை மறைத்து வைத்து விட்டார்கள் என்னைப் பெற்றவர்கள்" என்றான் வேதனையுடன்.
”அழாதீர்கள்" என்றாள் காமாட்சி, "இதற்காக அழுவார்களா? நல்ல வைத்தியமாகப் பார்த்தால் போயிற்று. நாளைக்கே அப்பாவிடம் சொல்லி நல்ல வைத்தியரை வரவழைக்கிறேன். இந்தப் பாலைச் சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கள்." ஆதரவுடன் அவன் கரங்களைப் பற்றிக் கட்டிலுக்கு அழைத்துப் போய்ப் படுக்க வைத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் தூங்கிப் போனான்.
திறந்த மாடியிலே வந்து நின்றாள் அவள். வெளியே கபாலியின் கோபுரமும் குளமும் தெரிந்தன. பிறந்து புத்தி தெரிந்த நாட்களாய் யாருக்குமே தீங்கு எண்ணாதவள் அவள். அவள் வாழ்க்கை ஒரு சோக கீதமாக மாறப் போகிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் அவள் உள்ளமெல்லாம் எரிந்தது.
பொழுது விடிந்ததும் கீழே இறங்கி வந்த மகளை நோக்கினாள் சுப்புலட்சுமி. பின்னலில் தைத்திருந்த மலர்கள் வாடாமல், நலுங்காமல் இருந்தன, கண்களின் ஓரத்தில் மட்டும் சிறிது மை கரைந்திருந்தது. தலை குனிந்தவாறு கொல்லைப் பக்கம் சென்ற காமாட்சி திரும்பி வந்து.... ”அம்மா! அப்பா எங்கே?" என்று கேட்டாள்.
"ஏனம்மா! இங்கே தானே இருந்தார்" என்றாள் சுப்புலட்சுமி.
வேதாந்தம் காப்பி சாப்பிட உள்ளே வந்தார்.
”குழந்தை உங்களைத் தேடினாளே!" என்று சொல்லிக்கொண்டே சுப்புலட்சுமி இரண்டு தம்ளர்களில் காப்பி கொண்டு வந்து வைத்தாள். இந்தாம்மா! நீ சாப்பிட்டு விட்டு உன் புருஷனுக்கும் கொண்டுபோய்க் கொடு" என்றாள்.
தகப்பனார் காப்பி அருந்துகிற வரைக்கும் மகள் ஒன்றும் பேசவில்லை. அவர் அருகில் சென்று நின்று 'அப்பா! அவருக்கு உடம்பு சரியில்லையாம், நம்ப டாக்டரை அழைத்து வந்து காண்பியுங்கள்." இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு அழுகை வந்து விட்டது.