நீரில் நனைந்து கொண்டே இருந்தன. ஓடுகிற வேகத்தில் பாலு அவற்றில் சறுக்கிக் கீழே விழுந்தான். கீழே மண்ணில் புதைந்து கிடந்த சிறு கூழாங்கல்-கூர்மையானது-அவன் நெற்றியில் குத்தி விட்டது. ரத்தம் குபுகுபுவென்று வடித்தது.
தெருவில் பாலு வருகிறானா என்று பார்க்க வந்த பவானி, இதைப் பார்த்ததும் திகைத்து விட்டாள். அப்படியே அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்தாள். வீட்டில் கோமதி இல்லை, மஞ்சள் குங்குமத்துக்காக யார் வீட்டுக்கோ போயிருந்தாள். நெற்றியில் வடியும் ரத்தத்தை அலம்பி, ஒரு ஈரத் துணியால் சுற்றிக் கட்டினாள். வெளியே மழை மிகவும் குறைந்திருந்தது ; சிறு தூறல்கள் மட்டுமே விழுந்து கொண்டு இருந்தன.
”சுமதி! பாலுவை நான் டாக்டர் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். வீட்டைப் பார்த்துக் கொள்', என்று கூறிவிட்டுப் பவானி, அவனை அழைத்துக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை அடைந்தாள்.
ஸ்ரீதரனின் வீட்டில் ஜெயஸ்ரீ, பாலுவைப் பார்த்ததும் .. ”என்னடா பாலு! நெற்றியிலே என்ன?" என்று கேட்டாள்.
”மழையிலே ஓடி வந்தேன். விழுந்து விட்டேன்”', என்றான் பாலு.
அவனுக்குத் தலையை 'விண் விண்' என்று வலித்தது. ஜெயஸ்ரீ ஓடிப் போய் உள்ளே இருந்த தன் தகப்பனாரை அழைத்து வந்தாள். நெற்றிக் காயத்துக்கு மருந்து வைத்துக் கட்டினார் டாக்டர் ஸ்ரீதரன். பிறகு கைகளை அலம்பிக் கொண்டே, "இந்த ஊருக்கு நீங்கள் வந்து ஒரு வருஷமாகிறது. நம் வீட்டுப் பக்கமே வருவதில்லை. பாலு அடிபட்டுக் கொண்டதால் இன்று வந்திருக்கிறார்கள்? வெளியிலேயே அதிகமாக எங்கேயும் போக மாட்டீர்களோ?" என்று கேட்டார்.
”போவதில்லை. வீட்டிலேயே வேலை சரியாகப் போய் விடுகிறது. ஒழிந்த வேளைகளில் எதையாவது படித்துக் கொண்டே இருப்பேன்" என்றாள் பவானி.
பவானி வீட்டைச் சுற்று முற்றும் கவனித்தாள். அந்தச் சுவரில் பெரிய அளவில் ஒரு பெண்மணியின் படம் மாட்டப்பட்டிருந்தது. சாந்தமும், புன்னகையும் தவழும் அவள் முகம்