பார்ப்பதற்கு அழகாக இருந்தது. ஸ்ரீதரனின் மனைவியின் படம் என்று பவானி ஊகித்துக் கொண்டாள்.
தயக்கத்துடன் பாலுவின் பக்கத்தில் நிற்கும் பவானியைப் பார்த்து ஸ்ரீதரன். ”வாருங்கள். உள்ளே போகலாம். இந்த வீட்டில் ஒரு பெரியவர் இருக்கிறார். அவரும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்" என்று கூறியவாறு முன்னே சென்றார். ஆஜானுபாஹுவான அவர் தோற்றத்தைப் பார்த்து வியந்தாள் பவானி. நல்ல சிவந்த நிறம். உயரத்துக் கேற்ற பருமன்; நீண்ட கூர்மையான நாசி, ஆழ்ந்து சிந்திக்கும் அமைதியான கண்கள். குழந்தையைப் போன்ற களங்கமில்லாத மனம்.
சாப்பிடும் கூடத்தை மூவரும் அடைந்தார்கள். இதற்குள்ளாகவே ஜெயஸ்ரீ, பவானி வந்திருப்பதைச் சுவாமிநாதனுக்குத் தெரிவித்து விட்டாள். அவள் வருவதைக் கவனித்த சுவாமிநாதன் ’வாம்மா ! நீ இந்தப் பக்கமே வருவதில்லையே' என்று அழைத்துப் பேசினார். கொஞ்சம் ஓவல்டின் கரைத்து மேஜை மீது தயாராக இரண்டு தம்ளர்களில் வைத்திருந்தார். ”சாப்பிடு குழந்தை" என்று பாலுவிடமும் பவானி யிடமும் கொடுத்தார்.
”எதற்கு? அதுவும் மணி எட்டடிக்கப் போகிறது. வேளை சமயம் இல்லாமல் சாப்பிடுவதா?" என்று சிரித்துக் கொண்டே கூறினாள் பவானி.
சுவாமிநாதன் அதற்குப் பதில் சொன்னார் : ”இல்லாவிட்டால் நீ சாவகாசமாய் எங்கே எங்கள் வீட்டுக்கு வரப் போகிறாய்? நீ தான் வெளியில் அதிகம் வருவதே இல்லையே..... அதுவும் நல்லது தான் அம்மா. கண்ட வேளைகளில் பெண்கள் வெளியில் திரியாமல் இருந்தால் தான் அவர்களுக்கு மதிப்பும், கௌரவமும் அதிகம் ஏற்படும்..."
பவானி ஒன்றும் பேசாமல் சுவாமிநாதன் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். பிறகு. ”நான் வருகிறேன். ராதா எங்கே காணோம்? நம் வீட்டுப் பக்கமே வருவதில்லை. அவளைப் பார்த்து மூன்று நான்கு மாசங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மன்னிகூட அவள் வருவதில்லை என்று குறைப்படுகிறாள்" என்று கூறியவாறு கிளம்பினாள்.
சுவாமி நாதனின் முகம் வாட்டமடைந்தது. ”ராதாவா? அவளுக்கு ஏகப்பட்ட அலுவல்! அவள் இல்லாமல் ஊரில் ஒரு நாடகம், சங்கீதக் கச்சேரி, சினிமா சங்கங்கள், கடற்கரை ஒன்றும்