"யாரோ" என்று சற்று கோபத்துடன் சொன்னாள்.
விஷயம் விபரீதமாக வளர்ந்து கொண்டே போயிற்று. வீட்டாருக்குத் தெரியாமல் ராதாவும், மூர்த்தியும் கடற்கரையில் சந்தித்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். நாடகம் பார்த்தார்கள். ஹோட்டலுக்குப் போனார்கள். இவர்களின் காதல் - நாடகம் ரகசியமாக நடக்கிறது என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
சென்னையில் தன் தமையனைத் தெரிந்தவர்கள் அநேகர் என்பதை ராதா அறவே மறந்து போனாள். காதலின் வேகம் எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுமோ என்னவோ ! மூர்த்திக்குக் கவலை இல்லை. அவனை அந்த ஊரில் தெரிந்தவர்கள் கோபியும் அவன் காரியாலயத்தைச் சேர்ந்த ஒரிருவரும்தான்.
டாக்ஸியில் போய்க் கொண்டிருக்கும் போது மூர்த்தியை ராதா கேட்டாள்: ”நீங்கள் எங்கள் வீட்டுக்கு ஒரு நாள் வாருங்களேன். அண்ணாவுக்கு அறிமுகப் படுத்துகிறேன்" என்றாள்.
”எதற்கு?" என்றான் மூர்த்தி.
"எதற்கா? நாம் இப்படியே இருந்து விட முடியுமா? நாலு பேர் அறியக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டாமா? இப்படி ஒளிந்து ஒளிந்து நடப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை ..."
”கல்யாணமா? அதற்கு இப்போது என்ன அவசரம்?" ராதா கலீரென்று சிரித்தாள். பின்னே அறுபது வயசிலா கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள்?"
"வருகிறேன் ராதா! உன் வீட்டில் இருக்கிறாரே அந்தக் கிழவர், அவரைக் கண்டாலே எனக்குப் பிடிக்க வில்லை !"
”உங்களுக்கு. என்னைத்தானே பிடிக்க வேண்டும்! அந்தக் கிழவரை இல்லையே? அவர் பாட்டுக்கு இருந்து விட்டுப் போகிறார்" என்றாள் ராதா சிரிப்புக்கிடையே.