”அடடா! உங்களுக்கு மருந்தை நிறுத்தினால் கிறு கிறுப்பு அதிகமாகி விடாதா? அண்ணாவுக்குத் தெரிந்தால் கோபித்துக் கொள்வாரே......'
சுவாமி நாதன் வறட்சியாகச் சிரித்தார்.
”கோபித்துக் கொள்ளட்டும். ஒரு தினம் இரண்டு தினங்கள் கோபம் வரும். அப்புறம் சரியாகி விடும்." ராதா மேலும் பேசவில்லை. ரத்த அழுத்தம் உள்ளவ ரிடம் அதிகமாகப் பேசி அயர்வைத் தரக் கூடாது என்று நினைத்து அங்கிருந்து சென்று விட்டாள்.
ஸ்ரீதரன் அன்று பகல் வைத்தியசாலையிலிருந்து சீக்கிரமே திரும்பி விட்டார். என்றுமில்லாமல் அவர் அன்று ராதாவையும் தம்முடன் சாப்பிட அழைத்தார். இருவரும் சாப்பிடும் இடத்தை அடைவதற்கு முன் தபால்காரர் ராதாவின் பெயருக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போனார். கடிதத்தின் மேலுறையில் இருந்த முத்திரையில் ’கல்கத்தா' என்று இருப்பதைப் பார்த்த ராதாவின் உள்ளம் ஒரு கணம் மகிழ்ச்சியால் துள்ளியது. அவசரமாக மாடிக்குச் சென்று கடிதத்தைப் பார்த்தாள். முதல் வரியில் ’அன்புள்ள ராதாவுக்கு' என்றிருந்தது. தன் வாழ்வில் அன்றே அன்பு உதயமாகி விட்டதாகக் கருதினாள் அந்தப் பேதை.
’இந்தக் கடிதம் உன்னை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தக் கூடும். நான் எவ்வளவோ பாவங்கள் செய்திருக்கிறேன். செய்யும் போது அவை அற்பமாக இருந்தன. அவை எனக்கு இன்பத்தையும் அளித்தன. ஆனால், அதன் விளைவுகள் இப்பொழுது பிரும்மாண்டமாகப் பேய் உருக்கொண்டு என் முன் நிற்கும்போது நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். சுருங்கச் சொல்லி விடுகிறேன். நான் என்னை ஏமாற்றிக் கொண்டதல்லாமல், உன்னையும் ஏமாற்றிவிட்டேன் ராதா! நான் ஒரு கடன்காரன். அதுவும் அற்ப சொற்ப மான குற்றத்தை நான் செய்யவில்லை. என்னை முழுவதுமாக நம்பி என் காரியாலயத்தினர் அளித்த பெருந் தொகையைக் கையாடி விட்டேன். இன்னும் சில மணி நேரங்களிலே நான் சட்டத்தின் முன்பு நிற்க வேண்டி இருக்கும் ...........'
ராதாவின் கண்கள் இருண்டன. கடிதத்தில் இருந்த எழுத்துக்கள் மங்கி மறைந்து கொண்டே வந்தன. கல்கத்தாவில் பிரும்மாண்டமான தெருக்களில் மூர்த்தி