அவன் ஒன்றும் பேசாமல் வந்தான். தபால் நிலையத்துக்குப் போய்த் தந்தி கொடுத்துவிட்டுத் திரும்பினோம். அதற்குள், நான் மாலனோடு பேசிய செய்தி எப்படியோ விடுதி முழுவதும் பரவியது. நாங்கள் திரும்பியவுடன் மாணவர் பலர் எங்களை நோக்கி வந்து, "என்ன செய்தி" என்று கேட்டார்கள். என் அறையை நோக்கி வந்தபோது சந்திரனுடைய அறைக்கு எதிரே மாணவர் சிலர் கூடியிருந்தது கண்டேன். ஒரு வேளை சந்திரன் திரும்பி வந்துவிட்டானோ? அதனால்தான் கூட்டம் இருக்கிறதோ என்று எண்ணிச் சிறிது மகிழ்ந்தேன். கூட்டத்தில் இருந்த சாந்தலிங்கம் என்னை நோக்கி விரைந்து வந்து, "உண்மையாகவா? நம்பவே முடியவில்லையே! அன்று சிறுநீர் அறையில் ஏற்பட்ட பிணக்கின் போது, அவ்வளவு அஞ்சாமையோடு என்னை எதிர்த்துப் பேசினானே! அவனுடைய தைரியத்தையும் தெளிவையும் நான் மனமாரப் போற்றினேனே! அப்படிப்பட்டவனா மனம் தளர்ந்து இப்படிச் செய்திருப்பான்?" என்று வருந்தினான்.
செய்தி விடுதிக் காப்பாளர்க்கு எட்டியது. அவரும் வந்தார். என்னைக் கேட்டார். நான் சொன்னபிறகு சிறிது சிந்தித்தபடி இருந்து, "ஊருக்குத்தான் போயிருப்பான் பார்க்கலாம். தந்திபோன பிறகு என்ன செய்தி வருகிறது என்று பார்ப்போம்" என்றார்.
திடீரென்று எனக்கு ஓர் எண்ணம் எழுந்தது. எங்காவது போய்க் கடலிலோ வேறு எங்கோ விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் என்று எண்ணியதும் மனம் திடுக்கிட்டது. மாலனிடம் சென்று சொன்னேன். அவன் உடனே படிப்பகத்துக்கு அழைத்துச் சென்று, செய்தித் தாளில் விபத்து தற்கொலை முதலான செய்திகளைத் தேடிப் பார்த்தான். ஆங்கிலத்தாள் தமிழ்த்தாள் இரண்டிலும் பார்த்த பிறகு, "கவலையே வேண்டா, அப்படி நடந்திருக்காது, நடந்திருந்தால் உடனே செய்தி வந்திருக்கும்" என்றான்.
அன்றைய தேர்வில் நான் நன்றாக எழுதவில்லை. எழுதும்போது, சந்திரனுடைய தேர்வுபற்றி அடிக்கடி எண்ணம் வந்தது. இரண்டு ஆண்டுகள் இண்டர் படித்துக் கடைசியில் இப்படி எல்லாவற்றையும் வீணாக்கிவிட்டானே என்று வருந்தினேன்.
மாலையில் சந்திரனுடைய வீட்டுக்குக் கடிதம் எழுதினேன். அதில் எல்லாச் செய்திகளையும் விரிவாக எழுதியிருந்தேன்.