என்னப்பா! இரவெல்லாம் கண் விழித்தாயா? இப்போது தூங்குகிறாயே" என்றார்கள். "ஆமாம்’பா இப்போது எழுப்பித் தொந்தரவு செய்யாதீர்கள். தயவு செய்து போய்வாங்க" என்று படுத்தபடியே அனுப்பி விட்டான். நானும் எங்கும் வெளியே போகவில்லை.
விடுதி முழுதும் விளக்கொளி பரவியது. ஒரே நோக்கமாக மாணவர்கள் எல்லாரும் தம் தம் அறையில் படிக்கத் தொடங்கினார்கள். சந்திரனுடைய அறையில் மட்டும் விளக்கு இல்லை. அந்த வழியே வந்த சிலர், "இது நடிகமணி சந்திரனுடைய அறை அல்லவா? எங்கே சிவகாமி காணோமே! இமாவதியைத் தேடிக்கொண்டு போயிருப்பான்" என்று பேசிக்கொண்டு போனார்கள். அதைக்கேட்டபோது என் மனமே கலங்கியது என்றால், உள்ளே ஒரு மூலையில் படுத்துக்கிடந்த சந்திரனுடைய மனம் எவ்வளவு வருந்தியிருக்குமோ? அந்தப் பாவிப் பெண் இமாவதி அப்படி இவனை ஆசை காட்டி ஏமாற்ற வேண்டுமா?... இல்லை, இல்லை. அவளுடைய கடிதத்தைப் பார்த்தால் அப்படி ஆசை காட்டியவளாகத் தெரியவில்லையே. நண்பன் ஒருவன் மற்றொரு நண்பனுக்குக் கடிதம் எழுதியது போலவே எழுதியிருந்தாள். காதல் செய்து மணந்து கொள்வதாக ஆசைகாட்டியிருந்தால் இப்படி உண்மையான நட்புரிமையோடு திருமண அழைப்பு அனுப்பிருக்க முடியுமா? அழைப்போடு கடிதம் ஒன்று எழுதியிருக்க முடியுமா? கடிதத்தில் கலங்காமல் எழுதியிருக்க முடியுமா? தான் நன்றாகத் தேர்வு எழுதியிருப்பதாகவும், இனியும் அவ்வாறு எழுதிக் குறையை முடிக்கப் போவதாகவும் குறிக்க முடியுமா? அதே கடிதத்தில் சந்திரனும் நன்றாக எழுதி வெற்றி பெறவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியுமா? ஒரு வேளை போலி ஆசைகாட்டி அவனை ஏமாற்றிய வேசித்தனம் உடையவளாக இருந்தால், இப்படி உண்மையன்பு உள்ள ஒரு கடிதம் எழுத முடியுமா? ஏமாற்றியவள் தன் ஏமாற்று வித்தையை வெளிப்படையாகக் காட்டி அழைப்பிதழை அனுப்புவாளா? இருக்கவே இருக்காது. இமாவதி உண்மையாக நல்ல பெண்ணாகவே இருக்க வேண்டும். சந்திரனிடத்தில் அன்பு மிகுந்த பெண்ணேதான். ஆனால் அந்த அன்பை இவன் காதல் என்று எண்ணிவிட்டான், பைத்தியக்காரன். ஆண் ஒருவன் மிகுந்த அன்பு செலுத்தினால் அது நட்புத்தானே? அப்படிப்பட்ட அன்பை ஒரு பெண்ணும் ஒருவனிடம் செலுத்த முடியாதா? அதுவும் நட்புத்தானே? ஆணுக்கும் பெண்ணுக்கும் மனத்தில் அன்பு நட்பு எல்லாம் உண்டு அல்லவா? பெண் அன்பு செலுத்தினால் அதை ஏன் ஆண்கள் காதல் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். என்னிடம் என் தங்கை அன்பு செலுத்துவதுபோல், ஒரு பெண் உடம்பின் எண்ணம் இல்லாத அன்பைச் செலுத்த முடியாதா? இவ்வளவு கூர்மையான அறிவு உள்ள சந்திரன் இதை உணராமல் அலைகின்றானே! இவனுடைய அறிவையும் அழகையும்