"வாலாசாவில் நூற்றுக்கு நூறும் தொண்ணூற்றெட்டுமாக வாங்கிக் கொண்டிருந்த நீ, எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்து என்னை வல்லவன் ஆக்கிய நீயா இப்படிச் சொல்வது?" என்றேன்.
"என்ன செய்வது?" என்று இரண்டு சொற்களில் முடித்தான்.
விஞ்ஞானப் பாடத்துத் தேர்வு அடுத்துத் தொடங்குவதற்கு முன் ஒரு நாள் விடுமுறை தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்காக வந்திருந்தது. விடுமுறையில் வெளியே போய்ச் சுற்றுகிறானா, ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறானா பார்க்கலாம் என்று சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். சந்திரன் குப்புறப்படுத்திருந்தான். விம்மி விம்மி அழுவது கேட்டது. கண்களைத் துடைப்பதைக் கண்டேன். பக்கத்தில் ஒரு கவர் ஓரம் கிழிக்கப்பட்டிருந்தது. தனியே ஒரு கடிதம் கிடந்தது. சுவர் ஓரத்தில் பளபளப்பான தாள் ஒன்று இரண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டிருந்தது. கிழித்த ஒரு துண்டில் ஒரு பெண்ணின் படமும், மற்றொன்றில் ஆணின் படமும் இருந்தன. திருமண அழைப்பிதழோ என்று ஐயுற்றேன். அவனுடைய தங்கை கற்பகத்தின் திருமண அழைப்பிதழோ என்று எண்ணினேன். என் மனம் பகீரென்றது. சந்திரனுக்கும் விருப்பமில்லாத இடத்தில் கற்பகத்தைத் திருமணம் செய்து கொடுக்கிறார்களோ? கற்பகத்தின் திருமணமா? இவ்வாறு எண்ணியவுடன், என் கண்களும் கலங்கின; என் இதயமும் விம்மியது. "சந்திரா?" என்றேன். அவன் திரும்பிப் பார்த்துவிட்டு, "இப்போது வராதே, போய்விடு" என்றான். எனக்கு அழுகை வந்துவிட்டது. "உன் துயரத்தில் எனக்கும் பங்கு உண்டு! சந்திரா! இதற்காகக் கலங்காதே. என்ன செய்வது!" என்றேன்.
அவன் திடுக்கிட்டாற்போல் பார்த்தான். "உனக்கும் தெரியுமா?" என்றான்.
"அதோ தெரியுதே" என்று திருமண அழைப்பிதழைக் காட்டினேன்.
"வேலு! மோசம் செய்து விட்டாளே!" என்று அறையின் கதவைத் திறந்தான். கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. முகம் வீங்கியிருந்தது. உடனே படுக்கையில் விழுந்து விம்மி அழுதான். "இதோ, பார்" என்று பக்கத்தில் இருந்த கடிதத்தை எடுத்து நீட்டியபடியே, "படி, படித்துப் பாரடா" என்றான். படித்துப் பார்த்தேன்.
அன்புள்ள அண்ணா,