"உன் படிப்பைப் பற்றி"
"எனக்கும் எழுதியிருக்கிறார்" என்று சொல்லி நிறுத்தி, சிறிது பொறுத்து, "சரி" என்றான்.
நான் வந்துவிட்டேன்.
எங்களுக்கும் கல்லூரித் தேர்வுகள் நெருங்கின. சந்திரன் முதலானவர்களுக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகள் நெருங்கின. மாலனும் நானும் போட்டியிட்டுப் படிப்பது என்று எங்களுக்குள் தீர்மானம் செய்துகொண்டோம். ஒரு நாள் மாலை அவன் என்னிடம் வந்து, "வேலு! கோயிலுக்குப் போய் வருவோம்" என்றான். நான் இசைந்து எழுந்தேன்.
வழியில் அவன், "மற்றவர்கள் யாருக்கும் சொல்லாதே. நான் எப்போதும் தேர்வுக்கு முன் ஓர் அருச்சனை செய்வது வழக்கம். அதோடு ஒரு பிரார்த்தனை செய்து கொண்டு, தேர்வு வெற்றி எனத் தெரிந்தவுடனே போய் அந்தப் பிரார்த்தனையைச் செய்துவிட்டு வருவேன். எஸ்.எஸ்.எல்.சி-யும் அப்படித்தான் தேறினேன். இப்போது அதற்காகத்தான் போகிறேன். நீயும் தேர்வை முன்னிட்டு அருச்சனை செய்; ஒரு பிரார்த்தனையும் செய்துகொள்" என்றான்.
என் மனத்தே பெருஞ்சோர்வு வந்தது. படித்த பையன் இப்படி எண்ணுகிறானே. எண்ணுவதையும் இவ்வளவு உண்மை என எண்ணுகிறானே. இவனிடம் என்ன சொல்வது என்று வருந்தினேன். "கோயிலுக்குப் போகலாம், வழிபாடு செய்யலாம். மனத்தைக் காக்கும்படி வேண்டலாம்; சோர்வைப் போக்கி ஊக்கம் தரும்படியாகவும் வேண்டலாம்; ஆனால் தேர்வில் வெற்றி தருமாறு வேண்டுவதா? அதற்கு லஞ்சமாக அருச்சனையும் பிரார்த்தனையும் செய்வதா? எனக்கு இப்படிப்பட்ட போலி வழிபாடு பிடிக்காது. நான் திரும்பிப் போகிறேன்" என்றேன்.
"நீ நம்பாவிட்டால் போகட்டும், துணைக்காவது என்னோடு வா" என்று என் இரு கைகளையும் பற்றிக் கொண்டான். அவனுடைய அன்புக்காகத் துணையாகப் போய் வந்தேன். திரும்பி வந்தபோது, "உனக்கு இதனுடைய பயன் எல்லாம் இப்போது தெரியாது; போக போகத் தெரியும்" என்றான்.