(Reading time: 27 - 54 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

அவளுடைய மனத்தை மாற்றி விடமுடியுமா? எழுந்து முகத்தை அலம்பிக்கொண்டு படிக்க உட்காரு. அல்லது வெளியே எங்காவது போய் வரலாம், வா. இதை மறப்பதற்கு வழி அதுவே" என்றேன்.

  

அவன் ஒன்றும் கூறாமல், குப்புறப் படுத்தபடியே கிடந்தான்.

  

எதை நினைத்துக்கொண்டோ, சிறிது நேரத்தில் ஒரு பெருமூச்சு விட்டு விம்மினான். "நீ அப்பாவுக்கு எழுதிவிடு. நான் தேர்வுக்குப் படிக்கப் போவதில்லை; ஊருக்கும் வரப் போவதில்லை என்று எழுதிவிடு" என்றான்.

  

இப்போது எதைச் சொல்லியும் பயன்படாது போல் இருக்கிறது. அழும் வரையில் அழுது ஓயுமாறு தனியே விட்டு, பிறகு வந்து சொல்லலாம் என்று எண்ணி எழுந்தேன். "இருக்கட்டும், பிறகு வருவேன்" என்று சொல்லிப் புறப்பட்டேன்.

  

அறைக்கு வந்த பிறகு என் மனம் அமைதியாக இல்லை. அவன் தனியே எங்காவது போய்த் தற்கொலை செய்து கொள்வானோ என்று மனம் அஞ்சியது. அதனால் உட்காருவதும் எழுந்து போய்ப் பார்ப்பதுமாக இருந்தேன். பக்கத்து அறைகளின் கதவின் ஒலி கேட்டாலும் அவன்தான் கதவைச் சாத்துகிறானோ என்று எழுந்து பார்த்தேன். ஏதாவது நஞ்சு வாங்கி வைத்திருந்து அதைக் குடித்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வானோ, அப்படியானால் உள்ளே இருக்கிறான் என்று விட்டுவிடுவதிலும் ஆபத்து இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி எழுந்துபோய்ச் சன்னல் வழியாகப் பார்த்து வந்தேன். அவன் பழையபடி அதே கோலத்தில் கிடந்தான். கடிதம் காலையில்தானே வந்திருக்கிறது. அதற்குள் எப்படி நஞ்சு வாங்கிக்கொண்டு வந்து அறையில் வைத்திருக்க முடியும். வீணாக நம் மனம் அஞ்சுகிறது என்று ஒருவாறு தேறினேன்.

  

அப்பால் சிறிது நேரத்தில் அவனுடைய அறையில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. எழுந்துப் போய்ப் பார்த்தேன். அவன் படுக்கையில் உட்கார்ந்து இரண்டு மாணவருடன் பேசிக்கொண்டிருந்தான். கிழிந்த அழைப்பிதழையும் கடிதத்தையும் எடுத்து மறைத்துவிட்டிருந்தான். "உடம்பு நன்றாக இல்லை. ஒரே மயக்கம். வயிற்று நோவு. படிக்க முடியவில்லை" என்று பொய்யான காரணத்தை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.