(Reading time: 27 - 54 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

"பார்த்தாயா? நீ என்னை வென்றுவிட்டதுபோல் பேசுகிறாய்" என்று உற்றுப்பார்த்தேன்.

  

"சரி, சரி. வா" என்று கைகளைப் பற்றினான்.

  

"நான் கடவுளை மிகப் பெரிய சக்தியாக எண்ணி வழிபடுகிறேன். ஒழுங்கான ஆட்சித் தலைவராக மதித்து அன்பு செலுத்துகிறேன். சின்ன சின்ன பொருளை எல்லாம் பார்த்து விதிகளை மாற்றி உதவி செய்யும் சிறுமை அவரிடம் இல்லை" என்றேன்.

  

அவன் அதற்கும் ஒன்றும் விடை கூறாமல், "எப்படியாவது இருக்கட்டும்" என்று நழுவினான்.

  

தேர்வுகளில் இருவரும் நன்றாகவே எழுதிக்கொண்டு வந்தோம். ஆனால் மாலனிடத்தில் மட்டும் அடிக்கடி ஏக்கமும் சோர்வும் காணப்பட்டன. இருந்தபோதிலும் விடா முயற்சியோடு படித்து எழுதினான்.

  

சந்திரனுடைய அறைக்கும் அடிக்கடி போய் எட்டிப் பார்த்து வந்தேன். தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் போய் எப்படி எழுதினான் என்று தெரிந்து வந்தேன். ஆங்கிலத்தில் பாடங்கள் மறந்து போவதாகவும் தமிழில் நன்றாக எழுதலாம் என்றும் கூறினான். கணக்குப் பாடங்களும் விஞ்ஞானப் பாடங்களும் நிறைய இருப்பதாகச் சொன்னான். அவனுக்குத் தேர்வில் உண்மையான ஆர்வம் இருந்ததை உணர்ந்து மகிழ்ந்தேன்.

  

ஆங்கிலத் தேர்வு நடந்த மூன்று நாட்களும் மாலையில் அவனுடைய அறைக்குப் போய், "எப்படி எழுதினாய்." என்று கேட்டேன். "ஏறக்குறைய எழுதியிருக்கிறேன்" என்று சொல்லி வினாத்தாள்களைக் காட்டினான்.

  

தமிழ்த் தேர்வு நடந்த இரண்டு நாட்களிலும் கேட்டபோது, "நன்றாக எழுதியிருக்கிறேன்" என்றான்.

  

கணக்குத் தேர்வு நடந்த இரண்டு நாட்களும் போயிருந்து கேட்டேன். "நூற்றுக்கு ஐம்பது வரும். அவ்வளவுதான்" என்றான்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.