இத்துடன் என் திருமண அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். நேரில் வந்து கொடுக்க எண்ணினேன். ஆனால் தேர்வுக்கு உரிய காலம் அல்லவா? இன்னும் மூன்று நான்கு நாளில் எல்லாம் முடிந்து விடும். பிறகு நான் நேரில் வருவதற்குள் நீங்கள் ஊர்க்குப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடுவீர்களோ என்று எண்ணியே தபாலில் அனுப்பியுள்ளேன். மன்னிக்க.
தேர்வுகள் நன்றாக எழுதியுள்ளேன். இனி உள்ளவற்றையும் நன்றாக எழுதிவிடுவேன். நீங்களும் அவ்வாறே செய்திருப்பீர்கள்.
உங்கள் அன்புக்குரிய
க. இமாவதி.
கடிதத்தைப் படித்த பிறகு என் உள்ளத்தின் துயரம் போயிற்று. உண்மை விளங்கிற்று. சந்திரனைப் பார்த்தேன். அவன் கண்களைத் துடைத்துக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தான்.
"தேர்வு முடிந்ததும், ஊர்க்கு உன்னை அழைத்துக் கொண்டுபோய் அப்பாவுக்குச் சொல்லி அவளை மணம் செய்துகொள்ள..." என்று வாக்கியத்தை முடிக்காமலே அழுதான். "இப்படி ஒரு திருமண அழைப்பு அச்சிட எண்ணினேன். அவள் செய்துவிட்டாள்" என்று தான் கிழித்து வீசியதைக் காட்டினான். மறுபடியும் குழம்பிய குரலில், "அவளுடைய வாழ்க்கை தொடங்குகிறது; என் வாழ்க்கை முடிகிறது" என்று கதறினான்.
என்ன சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பேசாமல் இருந்தேன். கிழிந்த அழைப்பிதழை எடுத்துப் பார்த்தேன். முன் பார்த்த அதே பெண்ணின் படம் இருந்தது. கீழே "இமாவதி" என்று அச்சிட்டிருந்தது. அடுத்த துண்டில் மணமகனின் படம் இருந்தது. அதன் கீழே "சிவசங்கரன்" என்று அச்சிட்டிருந்தது.
"இனிமேல் நான் படிக்க முடியாது. சாகத்தான் முடியும்." என்றான் சந்திரன்.