பார்த்தாள். "அவர் கிடைத்தவுடன் எனக்குத் தெரிவியுங்கள். என் வீட்டு முகவரிக்கு எழுதுங்கள். 10, நடுத்தெரு இராயப்பேட்டை" என்றாள்.
நான் அந்த முகவரியைக் குறித்துக் கொண்டேன்.
"சரி போகலாம். உனக்கு ஏதாவது தெரிந்தால் எழுது அம்மா. சாமண்ணா, பெருங்காஞ்சி, வாலாசா தாலுக்கா" என்று தலைமையாசிரியர் விடைபெற்று நகர்ந்தார். சாமண்ணா ஒன்றும் பேசாமலே கலங்கிய கண்களோடு தொடர்ந்தார்.
நான் விடைபெற்றபோது "விடுதியில் என் முகவரிக்கு எழுதுங்கள். அறை எண் - 90" என்றேன். அவள் வாய் திறந்து ஒன்றும் கூறாமல் கைகூப்பினாள் அவளுடைய கண்கள் இன்னும் கலங்கியிருந்தன.
வழியில் தலைமையாசிரியர் என்னைப்பார்த்து, "பெண் நல்ல பெண்; உண்மையானவள். இவன் தப்பாக எண்ணிவிட்டான். அவள் ஏமாற்றவில்லை. இவன்தான்-" என்று நிறுத்திவிட்டார்.
"அப்படி ஏதாவது சொல்லியிருந்தாலும், கேட்டுப் பார்த்துத் திருமண ஏற்பாடே செய்திருக்கலாமே" என்றார் சாமண்ணா.
கடற்கரையில் எங்காவது திரிகின்றானோ பார்க்கலாம் என்று அன்று மாலை கடற்கரைக்கும் போய், வருவார் போவோரை எல்லாம் பார்த்துக் காத்திருந்தோம். மறுநாள் சாமண்ணாவும் தலைமையாசிரியரும் தங்கள் ஊரார் இருக்கும் இடம் எல்லாம் தேடிப் பார்த்துச் சோர்ந்து போய் சந்திரனுடைய பெட்டியும் படுக்கையும் எடுத்துக்கொண்டு ஊர்க்குச் சென்றார்கள்.
----------
தொடரும்...