கண்டு அந்தப் பெண் அன்பு கொண்டிருப்பாள்! அந்த அன்பை உடம்பின் எண்ணம் இல்லாமல் நட்பாக வளர்த்திருப்பாள்! அவளால் முடிந்தது; இவனால் முடியவில்லை. காதல் என்று கோட்டை கட்டிவிட்டான். இன்று கலங்கி நிற்கிறான் என்று பலப்பல எண்ணினேன்.
உணவு நேரத்தில் சில மாணவர் வந்து கதவருகே நின்று, "எங்கே போயிருக்கிறான். காணோமே" என்றார்கள். அவர்களில் ஒருவன், "இதோ பூட்டு இல்லையே! விளக்கு அணைத்துவிட்டு உள்ளே இருக்கிறான்" என்றான். "சந்திரா! சந்திரா!" என்று கதவைத் தட்டினார்கள். அதற்குள் ஒருவன், "பாமா கதவைத் திறவாய்" என்று பாட்டுப் பாடத் தொடங்கினான். சந்திரன் உள்ளே இருந்து, "எனக்கு உடம்பு நன்றாக இல்லை கொஞ்சம் தூங்கிவிட்டுப் பிறகு வருவேன். தொந்தரவு செய்யாதீர்கள்" என்றான். அவர்கள் அங்கிருந்து உணவுக் கூடத்துக்குச் சென்றார்கள். நான் போய் அழைத்தாலும் அதே போல்தான் சொல்வான் என்று உணர்ந்து நானும் உணவுக்குப் புறப்பட்டேன். புறப்பட்ட நேரத்தில் மாலன் வந்து சேர்ந்தான். "என்ன! பக்கத்து அறையில் உங்கள் ஊர் ஆள் இல்லையே! விளக்கே காணோமே! ஆள் இல்லா விட்டாலும் விளக்குப் போட்டுப் பூட்டிவிட்டு மின்சாரத்தைச் செலவு செய்வது கல்லூரி நாகரிகம் ஆயிற்றே" என்றான். "உஸ்" என்று அவனைத் தடுத்து உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்றேன். வழியில், "அவனுக்கு மனம் நன்றாக இல்லை என்று குறிப்பாகச் சொன்னேன். "ஏன்? ஏதாவது காதல் வந்து முற்றி விட்டதோ? அதுவும் தேர்வு நெருக்கடியிலா? அந்தப் பாழும் காதல் இன்னும் நான்கு நாள் தேர்வு முடிந்த பிறகு வந்து தொலையக் கூடாதா?" என்றான். "எனக்கு ஒன்றும் தெரியாது" என்று மழுப்பினேன்.
உண்டு திரும்பி வந்து பார்த்தபோது, சந்திரனுடைய அறை பூட்டியிருந்தது. உள்ளே விளக்கு இல்லை. மனம் திடுக்கிட்டது. இன்னொரு பக்கம், "அப்படி எங்கும் போயிருக்க மாட்டான். இன்னும் சிறிது நேரத்தில் உணவுக் கூடத்துக்கு வருவதாகச் சொன்னான் அல்லவா? அதன்படி உணவுக்குத்தான் போயிருப்பான். நம் எதிரே வரவில்லை. ஒருகால் தெற்குப்படி வழியாக இறங்கிப் போயிருப்பான்" என்று ஒருவகையில் ஆறுதலும் அடைந்தேன்.
என் முக வாட்டத்தை உணர்ந்த மாலன், "ஏன் அப்படிக் கவலைப்படுகிறாய்? சந்திரனுக்காகவா? உன்னை அவன் ஒரு பொருளாகவே கருதவில்லையே. நீ மட்டும் ஏன் இப்படி உயிரை விடுகிறாய்?" என்றான்.