"இரவில் நெடுநேரம் கண் விழித்துப் படித்திருப்பாய். அதனால் வந்திருக்கும்" என்றான் ஒருவன்.
"அல்லது, கண்ட வேளையில் எல்லாம் தேநீர் குடிக்கிறாயாமே, அதனால் வந்திருக்கும், சனியன்" என்றான் மற்றொருவன்.
"என்னவோ, தொல்லை" என்று சந்திரன் கண்களைத் தேய்த்து கைத்துண்டினால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, ஒரு கவலையும் இல்லாதவன் போல் காட்டிக் கொண்டான். சிறிது நேரத்தில் இப்படி நடிக்கக்கூடியவன் இன்னும் சிறிது நேரத்தில் கவலையை மறந்து நடக்கவும் முடியும், படிக்கவும் முடியும் என்று நம்பிக்கை கொண்டேன்.
நண்பர்கள் போனபிறகு சென்று சன்னல் வழியாகப் பார்த்தேன். பழையபடியே படுத்துக்கொண்டிருந்தான். ஆனால் விம்மலும் கண்ணீரும் இல்லைபோல் தெரிந்தது.
நாலைந்து முறை எழுந்து எழுந்து போய்ப்பார்த்தேன். அவன் அதே நிலையில் இருந்தான். மாலைச் சிற்றுண்டிக்கு நேரம் ஆயிற்று. போய் அழைத்தேன். "எனக்கு தேவை இல்லை. வீணாகத் தொந்தரவு செய்யாதே; என் அறைப் பக்கம் வராதே" என்று கடிந்தான்.
பேசாமல் திரும்பினேன். நான் சிற்றுண்டி உண்ட பிறகு வந்து சன்னலருகே நின்று பார்த்தேன். அவன் அங்கே இல்லை. என் நெஞ்சு திடுக்கிட்டது. கதவை மெல்லத் தள்ளிப்பார்த்தேன். பிறகுதான் அது வெளியே பூட்டப்பட்டிருந்ததைக் கவனித்தேன். எங்கே போயிருப்பான் என்று எண்ணிக் கவலைப்பட்டு நின்று கொண்டிருந்த போது, அவன் குளிக்கும் அறைக்குப்போய் முகம் அலம்பிக் கொண்டு திரும்பியதைக் கண்டேன். என் உள்ளம் குளிர்ந்தது. என்னைப் பார்த்ததும் பேசாமல், சாவி எடுத்து அறையைத் திறந்து உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டான். சிறிது நேரத்தில் நண்பர் சிலர் வந்து, "ஏன் இப்படி அழுமூஞ்சிபோல உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? வெளியே சுற்றிவிட்டு வந்து படிக்க உட்காரலாம். வா" என்று அவனை வற்புறுத்தி அழைப்பது கேட்டது. அப்படியாவது அவர்களோடு போனால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அவன் புறப்படுவதாக இல்லை. நண்பர்கள் வெளியே வந்தனர். சிறிது கழித்துப்போய் எட்டிப்பார்த்தேன். கட்டிலின் மேல் படுத்து அந்தப் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். இன்னும் சில நண்பர்கள் வந்து கதவைத் தட்டினர். "அட