கல்லூரிக்குச் சென்றோம். அங்கே அந்தப் பெண்ணின் பெயர் சொல்லிக் கேட்டோம். சிறிது நேரத்தில் அவளே வந்து எங்கள் முன் நின்றாள். "என்ன செய்தி? நீங்கள் யார்?" என்றாள்.
நான்தான் பேசினேன். "நான் சந்திரனோடு படிப்பவன் பக்கத்து அறை" என்றேன்.
தொடர்ந்து பேசுவதற்குள், "வேலுவா? வணக்கம், அவர் சொல்லியிருக்கிறார்" என்றாள்.
"அவர் சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா. இவர் அந்த ஊர் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்" என்றேன்.
அவள் முகம் வாடியது. "என்ன செய்தி? சந்திரனுக்கு உடம்பு நன்றாக இல்லையா?" என்றாள்.
"சந்திரன் முந்தா நேற்று இரவு போனவன் இன்னும் வரவில்லை; தேடுகிறோம்."
அவள் முகம் வெளிறியது. "அப்படியா? என்ன காரணம்? தேர்வு?" என்று தன் வலக்கைச் சுட்டுவிரலை உதட்டில் சுவைத்தபடி தரையை நோக்கி நின்றாள்.
"காரணம் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா என்று கேட்பதற்காக வந்தோம்" என்றார் தலைமையாசிரியர்.
"அய்யோ! தெரியாதே! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே! தேர்வு நன்றாக எழுதவில்லையா? அப்படி இருந்தால் எனக்குத் தெரிவித்திருப்பாரே. இரண்டு நாளைக்கு முன்தான் நான் ஒரு கடிதம் எழுதினேன். என்ன காரணமோ?" என்றாள்.
சாமண்ணா கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தார். அவள் அவருடைய கலக்கத்தைக் கண்டதும், "என் நெஞ்சு பகீர் என்கிறதே! நான் அண்ணன் தம்பி இல்லாத பெண். அவர் என்னோடு அன்பாகப் பழகினார். எனக்கு அண்ணன் ஒருவர் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்தேன். படிப்பைப் பற்றியெல்லாம் எனக்குத் தைரியம் சொல்லுவார்" என்றாள். தரையை நோக்கிய அவளுடைய கண்களிலிருந்து நீர்த்துளிகள் விழுந்தன. முந்தானையால் கண்களைத் துடைத்தாள். கலங்கி நின்றாள். முந்தானையை வாயருகே வைத்தபடி என்னை நிமிர்ந்து