நகர்த்தி, சுயம்புவின் மார்புக்குக் கொண்டு போய், அவனை ஒரு கையால் தூக்கி, தன் பக்கமாக கொண்டு வந்தான். சுயம்பு அவன் மடியில் மல்லாந்து விழுந்தான். அவன் கண்களோடு தன் கண்களை நெருடவிட்டான். அவனது உருண்டு திரண்ட தோள்களில் கண்களை அலைய விட்டான். பிறகு தலையைச் சற்று நகர்த்தி, அதை அவன் வயிற்றில் போட்டுக் கொண்டு அண்ணாந்து பார்த்தான். முத்து, அவன் கழுத்தை நீவி விட்டபடியே, “எழுந்திருடா, எழுந்திருடா” என்றான். உடனே கட்டிலில் கிடந்த மூர்த்தி “எதுக்குடா பயப்படுறே... நாங்க இருக்கோம்டா... போடா... போய் முகத்தைக் கழுவிட்டு வாடா” என்று ஆறுதல் குரலில் பேசினான். ஆனால், மூர்த்தி சொன்னது கேட்காதது போல், முத்துவின் மடியில் கிடந்த சுயம்பு, திடீரென்று துள்ளி எழுந்தான். கால்களைத் தரையில் போட்டுத் தாண்டவமாடியபடி, கைகளை அங்குமிங்குமாய் அபிநயம் காட்டியபடி, இருவேறு நிலைகளில் கத்தினான்.
“டேய் முத்து... எப்படிடா என்னைத் தொடலாம்?... நீ பெரிய ஆணழகனாவே இருந்துட்டுப் போ... அதுக்காக இப்படி என்னைப் பாடாப் படுத்தணுமா?... கேட்கிறதுக்கு ஆள் இல்லன்னு நெனப்பாடா... இனிமே இப்படி தொடுற வேலை வச்சே... அப்புறம் மரியாதி போயிடும்...”
சுயம்பு, இரு கரங்களாலும் கண்களை மூடியபடியே அசையாது நின்றான். பிறகு வெறுமையும் வெறியும் கொண்ட பார்வையோடு, அந்த அறைக்கு வெளியே வந்தான். மீண்டும் உள்ளே வந்து செருப்புக்களைக் கழற்றி எறிந்துவிட்டு, வெறுங்காலோடு வாசல்படியைத் தாண்டினான். முத்துவும், மூர்த்தியும் ஓடிப்போய் அவனை இரு பக்கமும் சூழ்ந்தபடி மாறி மாறிக் கெஞ்சினார்கள்.
“இப்போ என்னடா நடந்துட்டுது... வாடா ரூமுக்குள்ள...”
“உன் புத்தி எனக்குத் தெரியும்... போடா...”
“டேய் அந்த தடியனுக்காக வராட்டாலும், என் முகத்துக்காவது வாடா...”
சுயம்பு சலித்து நின்றான். அவர்களை உஷ்ணமாகப் பார்த்தான். குளிர்காயும் உஷ்ணம். எரிக்கும் உஷ்ணமல்ல... பிட்டத்தை ஆட்டிக் கொண்டு கைகால்களைக் குழைய விட்டு, சிணுங்கியபடி சிரிப்பது போல் பேசி, அழுவது போல் முடித்தான்.