நல்ல கைராசி. எல்லாருக்கும் ஒரே மாதிரி ஊசிதான் போடுவாரு. அப்புறம் திரும்ப மாட்டாங்க... சிரிக்காதடா. நோய் போயிடும்னு சொல்ல வந்தேன். டிரைவர் நீங்களும் சிரிச்சா எப்படி... ஆட்டோவ அலற விடாமல், சிரிக்க விடுங்க பார்க்கலாம்.”
அந்த ஆட்டோ, அடுத்த தெருவுக்குள் போனது. அது நின்ற இடத்தின் மேல் பொறிக்கப்பட்ட பலகையில், அந்த டாக்டரின் பெயர் முத்துராஜோ... மோகனராஜோ... அந்தப் பெயருக்கு முன்னால், ஆங்கில எழுத்துக்கள் இருபத்து ஆறும் இடம் பெற்றிருந்தன. அத்தனையும் இறக்குமதிப் பட்டங்கள். ஒரே கூட்டம். அதில் காத்திருந்தாலே, பாதிப் பைத்தியம் பிடிக்கும். ஆனாலும் அவர்கள் காத்திருந்தனர். இவ்வளவுக்கும், மூர்த்தி, தான் வந்திருப்பதாகச் சொல்லும்படி கிளினிக் பையனிடம் சொல்லி அனுப்பினான். அந்தப் பையனும் உள்ளே போனான். சொன்னானோ, சொல்லலியோ... வெளியே வந்தவன், அவர்களைப் பார்த்து, தானே ஒரு டாக்டர் என்பது மாதிரி நெஞ்சை நிமிர்த்தினான்.
இதற்குள், ஆங்காங்கே உட்கார்ந்திருந்த பெண்களின் தலைப்பூக்களையும் கால் கொலுசுகளையும் ரசித்துப் பார்த்தான் சுயம்பு, சிலர் கால்களை இழுத்து வைத்துக் கொண்டார்கள். சிலர், பூக்களைக் கைகளால் மூடிக் கொண்டார்கள். நல்லவேளையாக ஒரு மணி நேரத்திற்குள், டாக்டர் கூப்பிட்டுவிட்டார். அப்போது, “நிலத்துக்கு உச்சவரம்பு வைக்கிறது மாதிரி டாக்டருக்கு வருகிற நோயாளிகளுக்கும் உச்ச வரம்பு வைக்கணும்” என்று முத்து கத்திக் கொண்டே உள்ளே போனான்.
அந்த மூவரையும், டாக்டர் எமதூதர்களாகப் பார்ப்பது போலிருந்தது. மூர்த்தியும் முத்துவும் உட்கார்ந்து விட்டு சுயம்புவை நிற்க வைத்தார்கள். டாக்டர் அவர்களைப் பார்க்காமல், கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “இன்னும் எவ்வளவு பேருப்பா இருக்காங்க” என்று கத்திவிட்டு, பதிலுக்காகக் காதுகளைக் குலுக்கலாய் வைத்தபோது, கம்பவுண்டர் மாதிரியான ஒருத்தர் உள்ளே வந்து, “இன்னும் பதினாறு பேர்” என்றார். அப்படிச் சொல்லிவிட்டுப் போகாமல், அங்கேயே நின்றார். தேதி பதினைந்து. இன்னும் போன மாதச் சம்பளம் கைக்கு எட்டாக் கனியாகவே இருக்குது...!
டாக்டர், அங்குமிங்குமாய்த் தலையாட்டியபடியே ‘உம்’ என்றார். மூர்த்தி சொன்னான்.
“இவன் பேரு சுயம்பு.”