“ஒங்க பேரு.”
“என் பேரு ஒங்களுக்குத் தெரியாதா. உங்க சித்தப்பா மகளோட.”
“இப்ப நான் கொஞ்சம் பிஸி. விஷயத்தைச் சொல்றீங்களா...”
“இதோ நிக்கானே சுயம்பு, ரொம்ப பிரிலியண்ட் சார். ஆனால் இப்போ ஒரு மாதிரி ஆயிட்டான். நைட்ல எங்ககூட படுக்காம வராண்டாவுல படுக்கான். பொண்ணுங்ககிட்ட ஒவரா பேசுறான். திடீர் திடீர்னு அழுவறான். கோபப்படறான். துண்டை எடுத்து மாறாப்பு மாதிரி போட்டுக்கிறான்...”
சுயம்பு டாக்டரிடம் எதையோ சொல்லத் துடித்தான். சகாக்களைத் துரத்திவிட்டு, அவரிடம் எல்லாவற்றையும் சொல்லப் போவதுபோல் அவர்கள்மீது போங்கடா பார்வையை வீசினான். டாக்டர் அவனிடம் சில கேள்விகளைக் கேட்க ஆயத்தமானார். இதற்குள் ‘கிளினிக் பாய்’ உள்ளே வந்து, “சார் எம்.எல்.ஏ. வெளியே இருக்கார். ஏதோ ஜலதோஷம் வந்தது மாதிரி சந்தேகமாம்” எனறான்.
டாக்டர், பரபரத்தார். இருக்கையிலிருந்து எழுந்து மூர்த்தியைப் பிடித்துத் தள்ளிவிட்டு, கதவைத் திறந்து, “ஒன் மினிட்ல கூப்பிடுறேன். ஜலதோஷம் தும்மலா வரலியே... அப்படியா சந்தோஷம்” என்று சொல்லிவிட்டு, கதவை மூடினார். பிறகு இருக்கையில் வந்து உட்கார்ந்தார். ஆனாலும், அவர் பார்வை எக்ஸ்ரே போல் அந்தக் கதவைக் கிழித்துக்கொண்டே போனது. அவரிடம் ஏதோ சொல்வதற்காக உதடு துடிக்க நின்ற சுயம்புவைப் பார்க்காமலே பிரிஸ்கிரிப்ஷன் எழுதினார். எழுதியபடியே, நாடி பார்த்தார். லோ பிளட் பிரஷர் இருந்தால் இப்படி ஒரு நிலமை வரும் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் அதைப் பார்க்க இப்போது நேரமில்லை. எம்.எல்.ஏ.வைப் பிடித்து, ஒரு எம்.எஸ் சீட் வாங்க வேண்டும். சுயம்புவைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் ஒரு தாளில் கிறுக்கியபடியே, “இந்த மாத்திரைகளை ஒரு வாரத்துக்குக் கொடுங்க... நைட்ல ஒரு மாத்திரை போதும். நெக்ஸ்ட் வீக்ல வாங்க” என்றார். பிறகு அவர்களை, அங்கே இல்லாதது போலவே அனுமானித்து அவர் பையையே பார்த்துக் கொண்டு நின்ற கம்பவுண்டர் மாதிரியானவரிடம், “எம்.எல்.ஏ.வைக் கூப்பிடுங்க” என்றார். ஆனாலும் அவரோ ஒரு அங்குலம்