மாணவர்களையும் அங்கேயே நிற்கும்படி கையாட்டிவிட்டு, மூர்த்தியும் முத்துவும், கீழே இறங்கித் தங்களது அறையைப் பார்த்து ஓடினார்கள். டேவிட்டும் அறைக்குள் போய் ஒரு சாவியை எடுத்துக் கொண்டு கீழே ஓடினான். கால் மணி நேரத்தில் அந்த மூவரும் உள்ளே வந்தார்கள். சுயம்புவுக்கு ராஜ யோகம். பொறியியல் மாணவர்களும் மருத்துவ மாணவர்களும் ஊசியும் மருந்தும் போல, மாத்திரையும் தண்ணிரும் போல ஒருவரோடு ஒருவர் விரவிக் கலந்து, அவனை டேவிட்டின் வெல்வெட் மெத்தைக் கட்டிலில் கிடத்தினார்கள். கை கால்களைப் பிடித்து விட்டார்கள். இதற்குள் உள்ளே வந்த டேவிட், அவன் வாய்க்குள் ஒரு பெரிய ஸ்பூனை வைத்து, உதடுகளை ஒட்டிக் கொள்ளாமல் செய்தான். பிறகு முறிவு மாத்திரையை வாய்க்குள் போட்டான். இன்னொரு டாக்டர்-மாணவன் அவன் வாய்க்குள் நிசமாவே பால் வார்த்தான்.
காலே கால் மணி நேரத்தில் சுயம்புவும், அவன் ஆட்டம் போட்ட கையும் காலும் அடங்கியது. சொருகிய கண்கள் சுகமாகப் பார்த்தன. அவன் எழுந்திருக்கக் கூடப் போனான். அவனை அசைய விடாமல் முத்து பிடித்துக் கொண்டபோது, மூர்த்தி கத்தினான்.
“பாவிப் பயலே. நீ இனிமேலும் இதே மாதிரி ஏதாவது ஏடாகூடம் செய்யத்தான் போறே. ஒப்பன் என் அப்பாவி மகன பார்த்துக்கப்பான்னு சொல்லிட்டுப் போனாரு. நீ செத்துக்கித்துப் போனா அவருக்கு நான் என்ன பதில் சொல்லணும்முன்னு இப்பவே சொல்லிடுடா...”
எல்லோரும் சிரித்தார்கள். நேற்றைய சண்டைக்காரர்கள் இன்றைய நண்பர்களானார்கள். டேவிட், சுயம்புவின் இதயத்தின் பக்கம் ஸ்டேதாஸ்கோப்பை வைத்தான். பிறகு வயிற்றில் கை வைத்தான். பிறகு கேட்டான்.
“தம்பிக்கு இப்ப எப்படி இருக்குது...”
சுயம்புவுக்கு வெட்கமாகிவிட்டது. வயிற்றில் பட்ட டேவிட்டின் கையைப் பிடித்து அது விலகாதபடி வைத்துக் கொண்டான். நாணிக்கோணிப் பேசினான்.
“என்னத் தம்பின்னு சொல்லாதீங்க... வேணும்னா பேரு சொல்லிக் கூப்பிடுங்க...”
டேவிட், உட்பட எல்லோரும் அவனை அதிசயமாகப் பார்த்தார்கள்.
-----------------
தொடரும்...