சுயம்புவுக்கு அவர்களைச் சமாளித்துவிட்ட திருப்தி, அவர்களுக்குத் தான் ஒரு நாகரிகப் பெண்ணாக தோன்றுவதில் ஒரு சந்தோஷம். அரைமணி நேரத்தில்...
அந்தப் பந்தல் முழுக்க ஒரே சத்தம். இன்னது என்று தனித்துப் பிரிக்க முடியாத சந்தைச் சத்தம். அதையும் மீறிய வெள்ளையம்மாவின் ஒப்பாரிச் சத்தம். ஆறுமுகப் பாண்டியின் கத்தல், கதறல், அதே ராமசாமிக் கிழவர் இப்போது மேளம் நின்ற வீட்டில் யாருக்கோ உபதேசிப்பதுபோல் உபதேசித்தார்.
“எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்கப்பா... கலியாணம் மட்டும் யார் யாருக்கு கொடுப்பனையோ... அங்கதான் நடக்கும். ஆனாலும் செருக்கி மவளுவ தந்திரக்காரிங்க. இந்தப் பய கோலத்தைப் பார்த்துட்டு, சத்தம் போடலை பாரு! அப்படிப் போட்டால், நாம் அவங்களை அதட்டி ஊரு விட்டு ஊரு வந்த மாப்பிள்ளய கட்டாயப்படுத்தி தாலி கட்ட வச்சிடுவோம்னு நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்காளுவ. மாப்பிள்ளை காருக்கு முன்னால வேனுல வந்து... ஒன் மகன் போட்ட கோலத்தை பார்த்துட்டு எதையோ கோணச் சத்திரத்தில வச்சிட்டு வந்ததாய் ஏமாத்தி வேனுக்குள்ள ஏறிப் பறந்து, வழியில வந்த மாப்பிள்ள காரையும் மடக்கி திரும்பி கரிச்சான் குருவி பறந்தது மாதிரி பறந்துட்டாளுவ பாரு. அப்படியும் ரோட்டுல ஒருத்தன்கிட்ட ‘பொண்ணோட குடும்பம் பொட்டக் குடும்பம். பிடிக்காம போறோம்னு’ சொல்லிட்டுப் போயிருக்காளுவ பாரு! தந்திரக்காரப் பய மவளுவ... சரிப்பா, போனது போகட்டும். போட்ட பந்தலப் பிரிக்கப்படாது... பேசாம நம்ம வத்தல் வியாபாரிக்குக் கட்டி வச்சிடலாம். ஐம்பது வயசுலயும் கலியாணம் செய்த ஆம்பளைங்க இருக்கத்தானே செய்யுறாங்க...”
பிள்ளையார் அவலத்தை ஆத்திரமாக்கினார்.
“மச்சான், யானை படுத்தாலும் குதிரை மட்டம் மச்சான். இதைவிட, கண்ணுக்குக் கண்ணா வளத்த மகள எருக்குழியில பொதைச்சிடலாம் மச்சான். நீரு இப்போ எனக்கு மச்சானாப் பேசல. அந்த செரங்குப் பயலுக்கு பெரியப்பாவா பேசுறீரு. வீட்ட விட்டுப் போறீரா மச்சான்?”
ராமசாமிக் கிழவர் வீறாப்பாய் போனபோது, பிள்ளையார் சுயம்புவைத் தற்செயலாப் பார்த்து விட்டார். ஒரு கம்பை எடுப்பதற்காக மணப்பந்தலை இழுத்துப் போட்டார். அது சரிந்தபோது,