ஒரு கம்பை உருவினார். சுயம்புமேல் மேலும் கீழுமாய் உச்சியும் பாதமுமாய் படர விட்டார். உச்சி பிய்ந்தது. நெற்றி பீறிட்டது. சுயம்பு அங்கு மிங்குமாய் ஓடினான். ஓடிய பக்கமெல்லாம் அடி. பிறகு அப்படியே நின்றுகொண்டான், கையைக் கட்டிக்கொண்டு, ‘அடித்துக் கொல்’ என்பது மாதிரி. பிள்ளையாரை நாலு பேர் பிடித்துக்கொண்டார்கள். ஆறுமுகப்பாண்டி அப்பாவின் வாரிசானான். அந்தக் கம்பை எடுத்தே தம்பிக்கு மூக்கில் ரத்தம் வடியுமாறு அடி கொடுத்தான். தோள் தோலை உரித்துக் காட்டினான். அப்போது மரகதம் கோவிலில் இருந்து அலங்கோலமாய் வந்தாள். நான்கு பெண்கள் அவளைப் பிணத்தைப் பிடிப்பதுபோல் பிடித்துக்கொண்டனர். கல்யாணம் ஆகுமுன்பே கலைந்த நெற்றி, விரிந்த முடி...
சுயம்பு ‘எக்காய்...’ என்று பீறிட்டு ஆறுமுகப்பாண்டி யின் பேய்க் கூத்தாடும் கம்புக்கு இடையே ஓடினான். அக்காவின் காலைக் கட்டிக்கொண்டு அழுதான். அவள் சீறினாள். துக்கமும் கோபமுமாய்க் கத்தினாள்.
“சீ... யாருடா ஒனக்கு அக்கா. என் வாழ்க்கையை கெடுக்கறதுக்குன்னே உடன் பிறந்தே கொல்லும் நோயுடா, நீ! இப்ப உனக்கு சந்தோஷம்தானேடா!”
சுயம்பு அக்காவைப் பார்த்தான். நெருப்புச் சூட்டை விடப் பெரிய சூடு பந்தல் கம்பு அடியைவிட பெரிய அடி! சுயம்பு தேங்காய் உடைப்பதற்காக இருந்த அரிவாளை எடுத்து பித்தனாகி நின்ற அப்பனிடம் கொடுத்தான். அவர் சும்மா இருக்கவே அண்ணனிடம் கொடுத்தான். அவனும் அசைவற்று நிற்கவே அந்த அரிவாளை எடுத்துத் தனது கழுத்துக்குக் குறி வைத்தான். இரண்டுபேர் வந்து பிடித்துக் கொண்டார்கள்.
சுயம்பு அக்காவைப் பார்த்தான். அவளோ எங்கேயோ நிற்பதுபோல் நின்றாள். ‘எக்கா’ என்று வாய் முட்ட வந்த வார்த்தையை மீண்டும் நெஞ்சுக்குள் முட்டி மோதவிட்டு, அவன் வெளியே ஓடினான். திக்கறியா, திசையறியா இடத்துக்கு. மனித வாடையே இல்லாத காட்டுக்கு...
-----------------
தொடரும்...