Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 21 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 21
சுயம்பு பிணம் போலக் கிடந்தான். துக்கத்திற்கு இதற்குமேல் எல்லை இல்லை என்பது போலவும், அது எல்லை தாண்டி தூக்கத்திற்கு வந்துவிட்டது என்பது போலவும் கிடந்தான். ஆகாயக் கூரையின் ஓட்டைக்கு மேல் கண் போட்டு உயரமாய்ப் பறந்த ஒரு கழுகு கூட, அது பிணமோ என்பது போல் தாழப் பறந்து பிறகு தன் பாட்டுக்குப் போனது. காக்கைகள் கூடக் கரைந்தன. ஒரு மணி நேரமல்ல, இரண்டு மணி நேரமல்ல. கிட்டத்தட்ட இரண்டு சினிமாக்கள் பார்க்கும் நேரம்.
என்றாலும், சுயம்பு அங்குமிங்குமாய்ப் புரண்டு மெள்ள மெள்ள கண்விழித்து மெல்ல மெல்ல எழாமல் அப்படியே வாரிச்சுருட்டி எழுந்தான். ‘எம்மா... எம்மா’ என்று பீறிட்டுக் கிளம்பிய வார்த்தையோடு எக்கா என்ற வார்த்தையை விரவிக் கலக்கவிட்டு, அங்குமிங்குமாய்ப் பார்த்தான். அது கண்ணாடி பீரோ உள்ள அக்கா அறையில்லை. அக்காவும் அங்கே இல்லை. சிமெண்ட் போட்ட தரையுமில்லை. வேப்பமரக் காற்று வீச்சுமில்லை. விசாலமான பரப்பும் இல்லை. கோழிக் கூடுமில்லை. அந்தக் கூடே அவன் வீட்டில் இதைவிடப் பெரிதாகவே இருக்கும். இது எது... என்னது... ஓகோ... இதுதான் நிரந்தரமான வீடோ... நான் கனவுல எங்கக்கா கூட தேக்குக் கட்டில்ல சத்தம் போட்டு சிரித்துக்கிட்டு இருந்ததா கனவு கண்டனே அது பொய்யோ...? பொய்யேதான்...!
சுயம்பு கண்ணைத் துடைத்துக் கொண்டான். அது, அவன் வீடல்ல... பெற்றோர் இல்லை. உடன்பிறப்புகளில் ஒருவருமில்லை. அவர்களை இனிமேல் பார்க்க முடியாது. பார்க்கவே முடியாதா? கூடாதா... அப்போ இது என்ன வாழ்க்கை... இது தேவையா... எக்கா... எம்மா... அய்யோ... அண்ணா... என்ன வந்து கூட்டிட்டுப்போ அண்ணா... அப்பா... என்னை இழுத்துட்டுப்போய் ஊர்லயாவது வெட்டிப் புதையுமப்பா...
சுயம்பு வீறிட்டுக் கத்தினான். ஆனால் அந்தக் கத்தல் தனக்குள்ளே ஏற்பட்ட சத்தம் என்பது அவனுக்குத் தெரியாது. குடும்பத்தினரை, இனிமேல் பார்க்கவே முடியாது என்ற நினைப்பு... அவர்களை அப்போது பார்க்க வேண்டும் என்று துடிப்பாக மாறியது. இங்கிருந்து இதோ இந்த ஓட்டை வழியாய்... ஊடுருவி ஆகாயத்தில் துள்ளிக் குதித்து, அங்கிருந்து பிறந்த வீட்டில் பிணமாகவாவது விழ வேண்டும் என்ற ஆவேசம். கூட்டி வந்த பச்சையம்மா மேலேயே ஒரு