சுயம்பு ஓலமிட்டான். இழுத்து இழுத்துப் பேசினான். கேழ்வரகு கூழாய்க் குழைந்த முகத்தில் தொட்டுக்க வைத்த எள்ளுருண்டை மாதிரியான கண்கள், நிலைகுத்த ஏங்கி ஏங்கிப் பேசினான்.
“எங்கக்கா எப்படித் துடிக்காளோ... அவளுக்கு இனிமேல் கல்யாணம் நடக்குமோ? நடக்காதோ... நான் பாவி! என் தங்கச்சி வாழ்க்கையையும் கெடுத்துட்டேனே!”
சுயம்பு எழுந்தான். நான்கைந்து குச்சிகளை வைத்து, குறுக்கு நெடுக்குமாய் கொண்ட பொந்து வழியாய் பிறந்த திசையைப் பார்த்தான். பிறந்த வீட்டை ஊரோடு சேர்த்துக் கண்களால் நகர்த்தி நகர்த்தித் தன் பக்கம் கொண்டு வரப்போவது போல் பார்த்தான். இதற்குள் அந்தப் பத்தாவது வகுப்புக்காரி பாத்திமா அவன் ஜாக்கெட்டைப் பிடித்திழுத்து, முதுகுப் பக்கத்தைத் திருப்பி முகத்துககு எதிராகப் பேசினாள்.
“எந்தப் பிரச்னையையும் அதன் எல்லைவரைக்கும் போய்ப் பார்க்கணும் சுயம்பு. நீ வீட்டுக்குப் போனால், அங்கே போய் என்ன பண்ணப்போற... கற்பனை செய்து பாரு... புடவையைக் கட்டாமல் இருக்க முடியுமா? அப்பா சூடு போடாமல் இருப்பாரா? ஊரு சிரிக்காமல் இருக்குமா? நீ போறதால ஒன் வீட்டுக்கு பிரச்னை வருமே தவிர, எந்தப் பிரச்னையும் தீராது! நல்லா யோசிச்சுப் பாரு... காரு வச்சிருக்கிற குடும்பத்துல பிறந்திட்டு, இங்கே கால இழுத்துக்கிட்டு திரியுற எனக்கு மட்டும் எங்க வீட்டுக்குப் போக ஆசையில்லையா...”
சுயம்பு, யோசிக்க யோசிக்க யோசனையே அற்றுப் போனான். பச்சையம்மா, அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கேவினாள்.
“கரையான் புத்துல இருந்து வெளிப்பட்ட ஈசலு பழையபடி அந்தப் புத்துக்குள்ள போக முடியாது மகளே! உடைஞ்ச கல்லு ஒட்டாது மகளே! கீழே விழுந்த குஞ்சு காக்கா நினைச்சாலும் அதை கூட்டுக்குள்ள வைக்க முடியாதுடி மகளே! நாம பிறத்தியார் சிரிக்கதுக்காக - சினிமாவில காமெடிக்காக - முரட்டுப் பயலுக்கு வடிகாலாகப் பொறந்த பொட்டைங்கடி..”
சுயம்பு மெள்ள மெள்ளக் கேட்டான்.