வேணுமாமாவைப் பொறுத்தவரை வசந்தி காமாட்சியம்மாளைப் பார்த்து விட்டு வந்து கூறிய எதுவும் அவரது உற்சாகத்தைப் பாதிக்கவில்லை. கலியாண ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் அவர். அந்த வட்டாரத்திலேயே செல்வாக்குள்ள நாதஸ்வர வித்துவான் ஒருவரிடம் முன்பணம் கொடுத்து இரட்டை நாதஸ்வரத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. மற்ற ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. கலியாணம் நெருங்கி வந்து கொண்டிருந்தது.
இவற்றால் சீமாவையரின் ஆத்திரமும் வயிற்றெரிச்சலும் அதிகமாயிருந்தன. எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்க்கிறாற்போல் நடுவில் இன்னொரு சம்பவமும் நடந்துவிட்டது; சீமாவையர் அதில் வகையாக மாட்டிக் கொண்டு அகப்பட்டிருந்தார்.
சங்கரமங்கலம் புனித அந்தோணியார் ஆரம்பப்பள்ளியின் ஆசிரியை மலர்கொடி பள்ளிக்கூடம் முடிந்து சீமாவையரின் மாந்தோப்பு வழியாக வீடு திரும்பும் போது முன்பு பல முறை அவளை வழி மறித்து வம்பு பண்ணியது போல் வம்பு பண்ணிக் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார் அவர். தோப்பில் அவருக்குத் துணையாக அவர் அடியாட்கள் இரண்டு பேரும் இருக்கவே சீமாவையருக்குத் துணிச்சல் அதிகமாகிவிட்டது. அகமத் அலி பாயின் கடத்தல் சரக்குகளோடு சேர்ந்து இங்கே வந்து, அவருக்குப் பிரியமாகக் கொண்டு வந்து தரப்பட்டிருந்த 'சீமைச் சரக்கு' வேறு உள்ளே போயிருந்தது. சீமாவையரின் தோப்பில் இறைவைக் கிணற்றை ஒட்டிப் பம்ப் செட் மோட்டாருக்காக ஒரு சிறிய சிமெண்டுக் கட்டிடம் உண்டு. அவர் குடிப்பதற்காகவும் மற்ற லீலாவிநோதங்களுக்காகவும் இந்தக் கட்டிடம் பயன்பட்டு வந்தது. அவர் வீடு அக்கிரகாரத்துக்குள் நடுவாக இருந்ததனால் அங்கே ஒரு நாளும் இந்த விவகாரங்களை அவர் வைத்துக் கொள்வதில்லை. தோப்பு ஊரிலிருந்து ஒதுங்கி இருந்ததனால் இதற்கெல்லாம் வசதியாயிருந்தது. நீண்ட நாள் நழுவி நழுவிப் போய்க் கொண்டிருந்த மலர்க்கொடியை அன்று எப்படியும் வசப்படுத்தியே தீருவது என்று சீமாவையர் கையைப் பிடித்து இழுத்தவுடன் அவள் கூப்பாடு போட்டிருக்கிறாள். பின்னாலேயே அவளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இறைமுடிமணியின் இயக்கத்து ஆட்கள் ஓடிவந்து சீமாவையரைக் கையும் களவுமாகப் பிடித்துத் தோப்பிலிருந்த தென்னை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டார்கள். இறைமுடிமணிக்குத் தகவல் அனுப்பி அவர் போலீஸுக்குச் சொல்லியனுப்பிவிட்டு வந்தார். சீமாவையரின் அடியாட்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருந்த பகுத்தறிவுப் படிப்பக இளைஞர்களை எதிர்க்க