"என் இரத்தம் சேர்றதான்னு பாருங்கோ. ஒண்ணும் எனக்கு ஆட்சேபணை இல்லை" - என்று மகிழ்ச்சியோடு டாக்டரைப் பின் தொடர்ந்தார் சர்மா.
என்ன ஆச்சரியம்! சர்மாவின் இரத்தம் கச்சிதமாகச் சேர்ந்தது. சர்மா இறைமுடிமணிக்காக இரத்தம் கொடுத்தார். மறுநாள் காலை இறைமுடிமணி நல்ல பிரக்ஞையோடு பேச முடிந்த நிலையில் இருந்தபோது தன்னைப் பார்ப்பதற்காக ஹார்லிக்ஸ், பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்த சர்மாவிடம், "எங்கள் ஆளுங்கள்ளாம் நான் பொழைச்சு எந்திரிச்சப்புறம் ஒரு வேளை ஆஸ்திகனா மாறிடுவேனோன்னு கூடப் பயப்படறாங்கப்பா! நீயில்ல எனக்கு இரத்தம் குடுத்தியாம்?" - என்று வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே சர்மாவைக் கேட்டார். அப்போது அருகே இருந்த படிப்பக ஆள் ஒருவர், "ஒரு ஐயரு ரத்தவெறி பிடிச்சுப் போய் அதைச் சிந்த வைச்சாரு. இன்னொருத்தரு அதைக் குடுத்துச் சரிப்படுத்தினாரு" - என்று சொன்னார். இறைமுடிமணி அந்த ஆளை உறுத்துப் பார்த்தார். "இந்தா நீ கொஞ்சம் வெளியில இரு சொல்றேன். நானே பெறவு கூப்பிடுறேன்" - என்று சொல்லி அந்த ஆளைப் போகச் சொன்னார் இறைமுடிமணி. உடனே சர்மா "அவரை ஏன் கோபிச்சுக்கறே தேசிகாமணி! அவரு உள்ளதைத்தானே சொல்கிறார்?" - என்றார். ஆனால் அந்த ஆள் இறைமுடிமணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு உடனே வெளியேறி விட்டார். அவர் வெளியேறியதும் இறைமுடிமணி சர்மாவிடம் கூறினார்:
"செய்யிற அக்கிரமத்தையும் செஞ்சுப்போட்டு நானும் என் ஆளுங்களும் அவரு தோப்பிலே அத்து மீறி நுழைஞ்சி கலகம் பண்ணிச் சொத்துக்குச் சேதம் விளைவிச்சிருக்கோம்னு போலீஸிலே புகார் பண்ணியிருக்காரு சீமாவையரு. அந்த நேரத்திலே அவரு சிவன் கோவில்ல குடும்பத்தோட அர்ச்சனையில்லே பண்ணிக்கிட்டிருந்தாராம்? தனக்கு ஆபத்துன்னாச் சாமியைக் கூடப் பொய்சாட்சிக்கு இழுக்கிறானுவ" -
"யாரைச் சாட்சிக்கு இழுத்தா என்ன? அக்கிரமம் பண்றவா அழிஞ்சுதான் போயிடுவா..."
"அழிஞ்சு போகலியே விசுவேசுவரன்! நேர்மாறா அக்கிரமத்தை எதிர்க்கப் போன நாங்களில்லே கையும் காலும் வெட்டுப்பட்டு இப்படி ஆஸ்பத்திரியிலே வந்து அழிஞ்சு கிடக்கிறோம். நாலு காசு வசதியுள்ளவன் இங்கே நியாயம், சட்டம், போலீசு எல்லாத்தையும் கூட வெலைக்கி வாங்கிடறானே?"