(Reading time: 15 - 30 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

"இல்லியோ பின்னே? தெய்வம் எப்பிடிப் பொறுத்துக்கும்னேன்?"

   

இதைக் கேட்டுச் சாஸ்திரிகளின் மௌட்டீகத்துக்காக மட்டுமின்றி மந்த புத்திக்காகவும் சேர்த்து இரக்கப்பட்டுக் கொண்டே மேலும் அவரையே கேட்டார் சர்மா:-

   

"பொறுமையே பூஷணம்னும் சகிப்புத் தன்மையே சத்தியம்னும் மனுஷாளுக்கெல்லாம் முன்மாதிரியாக் கத்துக்குடுக்க வேண்டிய தெய்வம், நீர் சொல்ற மாதிரி அத்தனை பொறுமையில்லாததாயும், அவசரக் குடுக்கையாகவும் சுயநலமாகவும் இராது சாஸ்திரிகளே-"

   

"நீங்க என்ன சொல்றேள் சர்மா? 'அவனோட' பழகிப் பழகி வரவர நீங்களே இப்பல்லாம் 'அவன்' மாதிரிப் பேச ஆரம்பிச்சுட்டேள்..."

   

"அதில்லே! சமயா சமயங்கள்ளே ஆஸ்தீகாளும் தங்களை அறியாமத் தெய்வத்தை அவமதிச்சுப் பேசிடறதுண்டு. அதுவும் கூடத் தெய்வ நிந்தனைதான். நீங்க சொன்னதையும் அதிலே தான் சேர்த்துக்கலாம். நம்ம துவேஷத்தை, நம்ம மௌட்டீகத்தை, நம்ம அஞ்ஞானத்தை நம்மோட பழி வாங்கற மனப்பான்மையை இதுக்கெல்லாம் அப்பாற்பட்ட பரம்பொருள் மேலே ஏத்தி வச்சு அது பழி வாங்கிடும், கண்ணை அவிச்சுப்பிடும், காலை ஒடிச்சிப்பிடும்னெல்லாம் சொல்றது எத்தனை அபத்தம்? 'வேண்டுதல் வேண்டாமை' இல்லாதவன்னு பகவானைப் பத்தி ஆயிரம் சாஸ்திரங்கள்ளே நீர் திரும்பத் திரும்பப் படிச்சு என்ன பிரயோஜனம் சாஸ்திரிகளே?"

   

எவ்வளவோ அடக்கிக் கொள்ள முயன்றும் சர்மா குரலில் கடுமை தொனித்து விட்டது. சாஸ்திரிகள் சர்மாவுக்குப் பதில் சொல்லாமல் கோபத்தோடு நேரே சீமாவையர் வீட்டுத் திண்ணைக்கு விரைந்தார். அங்கே அவர் எதிர்பார்த்தது போல் வம்பர் சபை கூடியிருந்தது. இவர் போவதற்கு முன்பேயே 'சர்மா எதிர்ப்புத்'தான் அங்கே நடந்து கொண்டிருந்தது. சீமாவையர் அத்தனை பேருக்கும் தாராளமாக வெற்றிலை சீவல் வழங்கிச் சர்மா எதிர்ப்பை உற்சாகப்படுத்தி விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

   

சாஸ்திரி வந்து சொன்னதைத் தொடர்ந்து கூடியிருந்தவர்களிடம் சீமாவையரே சர்மாவைப்பற்றி மேலும் குறை கூறித் தூபம் போட்டுவிட வசதியாயிருந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.