க்ஷேமலாபம் விசாரிக்கவே சர்மாவும் பதில் பேசினார்.
"எங்கே போயிட்டு வரேள் சர்மா?"
"எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட சிநேகிதன் ஒருத்தன் ஒரு கலவரத்திலே வெட்டுக் காயப்பட்டு ஆஸ்பத்திரியிலே படுத்த படுக்கையா இருக்கான் - அவனைப் போய்ப் பார்த்துட்டு வாரேன்."
"யாரு? அந்தச் 'சூனா மானா'க்காரன் தானே, 'சாமியில்லே தெய்வமில்லே'ன்னு சதா நாஸ்தீகப் பிரசாரம் பண்ணிண்டிருக்கானோ இல்லியோ, அதான் தெய்வமாப் பார்த்து இந்த்த் தண்டனையை அவனுக்குக் குடுத்திருக்கு."
இதைக் கேட்டுச் சர்மாவுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. கடவுளின் செயல்களுக்கு இப்படிக் கொச்சையாக அர்த்தம் கற்பிக்கிற ஆஸ்திகனைவிட மோசமான நாஸ்திகன் வேறொருவன் இருக்க முடியாது என்று பட்டது அவருக்கு. தெய்வ சிந்தனைகளில் மிகவும் மோசமான தெய்வ நிந்தனை, 'கடவுள் தம்மை எதிர்த்துப் பேசுகிறவன் வீட்டில் கொலை விழச் செய்வார், தம்மைத் துஷ்பிரசாரம் செய்கிறவனை உடனே கையைக் காலை வாங்கிப் பழி தீர்த்துக் கொள்வார்' என்று மூட பக்தியால் பாமரத்தனமாக விளக்கம் கொடுப்பதுதான். இந்த மூடத்தனமான விளக்கம் சரியாயிருந்தால் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாத, அல்லது வெற்றி மமதையில் நிதானமிழந்த ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியைப் போலக் கடவுளும் பழி வாங்கவும், பகை தீர்க்கவும், எங்கே எங்கே என்று தேடித் தவித்துக் கொண்டு திரிவது போலாகிவிடும். இவ்வளவு வேதங்கள் உபநிஷதங்களைக் கரைத்துக் குடித்திருந்தும் அதே சாஸ்திரி அத்தனை மௌட்டீகம் நிறைந்த ஒரு விளக்கத்தைக் கொடுத்தது கண்டு சர்மா அப்போது அருவருப்பு அடைந்திருந்தார். அவரை விட - அவற்றை எதிர்ப்பதற்காகவே சாஸ்திரம் சம்பிரதாயங்களைப் படித்துக் கொண்ட இறைமுடிமணி இன்னும் தெளிவாகவும் பிரக்ஞையுடனும் நன்றாகவும் படித்திருப்பதாகச் சர்மாவுக்குத் தோன்றியது.
சர்மா தன் மனத்தினுள் இருந்த எரிச்சலை அமைதிப் படுத்திக் கொண்டு "சாஸ்திரிகளே! நீர் சொல்றபடி வச்சுண்டுட்டாத் தனக்கு கெடுதல் பண்றவாளையும், தன்னை எதிர்க்கிறவாளையும் எப்படா தேடிப் பிடிச்சுக் கையைக் காலை வெட்டித் தண்டிக்கலாம்னு ஒருவிதமான சுயநலத்தோடு தெய்வம் தயாராக் காத்துண்டிருக்கற மாதிரின்னா ஆறது?" என்றார்.