முடியாமல் உடனே போய் அகமத் அலி பாய்க்குத் தகவல் தெரிவித்தார்கள். பணம் விளையாடியது. போலீஸ், எதிர்பார்த்தபடி உடனே தோப்புக்கு வரவில்லை. ஆனால் சீமாவையரைத் தப்பச் செய்வதற்காக அகமத் அலிபாய் ஒரு கூலிப் பட்டாளத்தை அனுப்பியிருந்தார். இருட்டியதும் தோப்பில் புகுந்த அந்தக் கூலிப் பட்டாளம் முதல் வேலையாகச் சீமாவையரைத் தென்னை மரத்திலிருந்து அவிழ்த்துவிட்டுத் தப்பச் செய்து விட்டது. அப்புறம் நடந்த கலகத்தில் பகுத்தறிவுப் படிப்பக ஆட்களில் சிலருக்கும், அவர்களைத் தேடி அங்கு வந்திருந்த இறைமுடிமணிக்கும் அரிவாள் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. போலீஸ் வருவதற்குள் கூலிப் பட்டாளம் தப்பி ஓடிவிட்டது. அங்கே வந்து சேரப் போலீஸார் வேண்டுமென்றே அதிக நேரமாக்கினாற் போலப் பட்டது.
அவசர அவசரமாகத் தப்பி ஓடிய சீமாவையர் தான் எந்த நேரத்தில் மாந்தோப்பில் அந்தப் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்ததாக அவர்கள் போலீசில் புகார் செய்திருந்தார்களோ அதே நேரத்தில் சிவன் கோவிலில் குடும்பத்தோடு சென்று அர்ச்சனை செய்து தரிசனம் பண்ணிக் கொண்டிருந்ததாகச் சாட்சிகளும், ஓர் அலிபியும் ஜோடனை செய்தார்.
போலீஸார் சீமாவையரின் தோப்பில் அத்துமீறிப் புகுந்து கலகம் விளைவிக்க முயன்றதாகப் பகுத்தறிவுப் படிப்பக ஆட்கள் மீதும் இறைமுடிமணி மீதும் வழக்குப் பதிவு செய்திருந்தார்கள்.
இறைமுடிமணிக்கு இடது தோள்பட்டையில் சரியான அரிவாள் வெட்டு. சங்கரமங்கலம் லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அவரைச் சேர்த்திருந்தார்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்க அதிக நேரமாகி விட்டதால் நிறைய இரத்தம் வீணாகி இருந்தது. தகவல் தெரிந்து சர்மா, ரவி, கமலி எல்லோரும் பதறிப் போய் ஆஸ்பத்திரிக்கு விரைந்திருந்தார்கள். ஏற்கனவே இறைமுடிமணியின் மருமகன் குருசாமியும், மனைவி மக்களும், குடும்ப நண்பர்களும், இயக்க நண்பர்களுமாக ஆஸ்பத்திரியில் கவலையோடு குழுமியிருந்தனர். இறைமுடிமணிக்கு நிறைய இரத்த இழப்பு ஏற்பட்டதனால் புது இரத்தம் செலுத்த வேண்டி இருந்தது. அவரது இயக்கத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு இரத்தம் கொடுக்க முன் வந்தனர். ஆனால் சோதனை செய்து பார்த்ததில் ஒருவரது இரத்தமும் அவரது குரூப் இரத்தமாக இல்லை.
டாக்டர் சர்மாவைப் பார்த்தார். அவரைக் கேட்கலாமா வேண்டாமா என்று தயங்கினார்.