"வாஸ்தவம், தெய்வத்தை நம்பறவாளைவிடப் பணத்தையும், வசதிகளையும் நம்பித் தொழறவா தேசத்திலே அதிகமாயிட்டா. யோக்கியமாயிருக்கணும், உழைச்சுச் சம்பாதிக்கணும்கிற நம்பிக்கையே போயிடுத்து. நல்லவனாயிருக்கணும்கிற நம்பிக்கையை விட நல்லவனைப் போல இருந்துட்டாப் போறும்னு திருப்திப் படறதே அதிகமாயாச்சு-"
"வேதத்தைச் சொல்லுற வாய் பொய்யையும் சொல்லுது. சீமாவையர் கடவுளை நம்பறதைவிட அதிகமாக அகமத் அலி பாயோடு பணத்தைத்தான் நம்புறாரு."
"என்னைப் பொறுத்தவரை எவன் யோக்கியனாயிருக்கானோ, எவன் மத்தவனை ஏமாத்தாமே உழைச்சு வாழறானோ, எவன்கிட்டச் சூதும், வாதும் வஞ்சனையும் இல்லியோ அவனெல்லாம் ஆஸ்தீகன் தான். எவன் அயோக்கியனாயிருக்கானோ, எவன் மத்தவனை ஏமாத்தி, உழைக்காமச் சுரண்டி வாழறானோ எவன்கிட்டச் சூதும் வாதும் வஞ்சனையும் நிரம்பியிருக்கோ அவனெல்லாம் தான் நிஜமான நாஸ்தீகன்!"
"நீ சொல்றே... ஆனால் உலகத்துனோட கண்ணிலே சீமாவையருதான் ஆஸ்தீகர், நான் நாஸ்தீகன். முரடன்! ஊரோட ஒத்துப் போகாதவன்..."
"அப்படி யார் யார் நெனைக்கறாளோ தெரியாது. ஆனா நான் அப்படி உன்னைப் பத்தி நெனைக்கலே தேசிகாமணி!"
"நீ நெனைக்க மாட்டப்பா... அதைக் கூடப் புரிஞ்சுக்கத் தெரியாதவனா நான்?"
இந்த உரையாடலின் போது இருவருமே மனம் நெகிழ்ந்த நிலையில் இருந்தார்கள். இறைமுடிமணி பத்து நாட்களுக்கு மேல் ஆஸ்பத்திரியில் இருக்க நேர்ந்தது. அப்படி அவர் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக இருந்த நாட்களில் சர்மா நாள் தவறாமல் ஆறுதலாக அவரைப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு நாள் சர்மா ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டுத் திரும்பியபோது வழியில் சந்தித்த சாஸ்திரி ஒருவர் சர்மாவிடம் பேச்சுக் கொடுத்தார் - அந்தச் சாஸ்திரி சீமாவையருக்கு மிகவும் வேண்டியவர். அவரிடம் சர்மாவாக வலுவில் பேசப் போகவில்லை. பாதையில் எதிர்ப்பட்டு அவராகத் தம்மை நிறுத்தி