பொண்டுகளும் தலைமுறை தலைமுறையா ஒரே வித்திலேருந்து வளர்ற துளசியைச் சம்ரட்சணம் செஞ்சு பூஜை பண்ணிண்டு வரோம். பூஜை பண்ண மனுஷா இல்லாமல் இந்தாத்துத் துளசி மாடம் ஒரு காலத்திலேயும் வாடப்பிடாது. அதிலே நாள் கிழமைகளில் மட்டுமில்லாமே எல்லா நாள்ளேயும் தீபம் பிரகாசிக்கணும்.
"இங்கே இந்தக் குடும்பத்தோட சௌபாக்கியங்களும், லட்சுமி கடாட்சங்களும், விருத்தியும் நாங்க பரம்பரையா சரீர சுத்தத்தோடேயும் அந்தரங்க சுத்தத்தோடேயும் பண்ணிண்டு வர துளசி பூஜையாலேன்னுதான் எங்களுக்கு நம்பிக்கை. நாங்க நல்ல நாள் தவறாமே விரத நியமம் தப்பாமே துளசி மாடத்திலே ஏத்தற விளக்குத்தான் இதுவரை இந்தக் குடும்பத்தைப் பிரகாசப்படுத்திக் காப்பாத்திண்டு வரது. எத்தனையோ தலைமுறைக்கு மின்னே ராணி மங்கம்மா காலத்திலே விரத நியமம் தப்பாத ஒரு பிராம்மண சுமங்கலிக்குத் தானம் பண்ணணும்னு தை வெள்ளிக்கிழமையும் அதுவுமா சொக்கத் தங்கத்திலே பண்ணின சொர்ண விளக்கு ஒண்ணை வச்சுண்டு அந்த ராணி, கிராமம் கிரமாமாத் தேடிப் பார்த்தாளாம். கடைசியா அந்தச் சொர்ண தீபத்தை இந்தக் குடும்பத்து மாட்டுப் பொண் ஒருத்திதான் தானம் வாங்கிண்டாளாம். அன்னியிலேருந்து இந்தக் குடும்பத்து மாட்டுப் பொண்கள் ஒவ்வொருத்தரா அந்தச் சொர்ண தீபத்தையும் துளசி பூஜை பண்ற உரிமையையும் முந்தின தலைமுறைப் பெரியவா கிட்டேருந்து பரம்பரை பரம்பரையா அடைஞ்சிண்டு வரோம். இன்னிக்கும், நாளையும் தை வெள்ளிக்கிழமை தவறாமே நான் அந்தத் தங்க விளக்கைத் துளசி மாடத்திலே ஏத்தி வைக்கிறதுண்டு! இந்தா இப்போ அதை நீ வாங்கிக்கோ. இனிமே நீ அந்தப் பூஜையைத் தொடர்ந்து பண்ணிண்டு வா" - என்று காமாட்சியம்மாள் எழுந்திருந்து பெட்டியிலிருந்து அந்தத் தங்க விளக்கை எடுத்துத் திரியிட்டு ஏற்றிக் கமலியிடம் நீட்டினாள்.
"உங்கள் கட்டளைப்படியே இந்த வீட்டின் கிருஹ தீபம் அணையாமல் - துளசிமாடம் வாடாமல் இங்கிருந்து குடும்பம் நடத்தறேன். ஆனால் தயவு செய்து நானும் 'இவரு'மாக ஒரே ஒரு தடவை என் பெற்றோரைப் பார்த்து வருவதற்காகப் போய் வர மட்டும் அனுமதி தாருங்கள் அம்மா" - என்று கூறி வணங்கி அந்தத் தீபத்தை இரண்டு கைகளாலும் அணையாமல் பயபக்தியோடு வாங்கிக் கொண்டாள் கமலி. காமாட்சியம்மாள் கமலியின் கோரிக்கைக்கு இணங்கினாள். அப்போது அவளுடைய கண்களில் நீர் நெகிழ்ந்தது. அவள் தளர்ச்சியோடு படுக்கையில் சாய்ந்து கொண்டாள். சிறிது தொலைவிலிருந்து வசந்தியும், ரவியும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சர்மா, வேணு மாமா முதலியோர் புரோகிதருடன் கிருஹப் பிரவேசத்துக்கான வைதிக காரியங்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். பார்வதி