ரவி விலகிப் போய் மற்றவர்களோடு சேர்ந்து கொண்டான். தள்ளி நின்று கொண்டிருந்த கமலியை ஜாடை செய்து அருகே அழைத்தாள் காமாட்சியம்மாள். அப்படி அழைத்த அவள் முகமும் பார்வையும் நிஷ்களங்கமாக இருந்தன.
காமாட்சியம்மாள் அப்போதிருந்த தளர்ச்சியைப் பார்த்துக் கமலி அவளை அப்படியே அணைத்தாற் போலத் தாங்கிச் சென்று கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, "உங்களுக்கு இருக்கிற தளர்ச்சியில் நீங்கள் நிற்கக் கூடாது! உட்கார்ந்து கொண்டே சொல்லுங்கள்" - என்று அருகே பவ்யமாக நின்று கொண்டாள். காமாட்சியம்மாள் அப்படியே அவளை விழுங்கி விடுகிறவளைப் போல வைத்த கண் வாங்காமல் பார்த்து அவளது இன்னும் காப்புக் களையாத கையுடன் கூடிய அழகிய மணக்கோலத்தைச் சில விநாடிகள் தன்னுள் இரசித்தாள்.
அதிகாலையில் தானே தொடுத்துத் தனக்கு வைத்துக் கொண்டது போக மீதியிருந்த பூவைப் பாருவிடம் எடுத்துக் கொண்டு வரச்சொல்லித் தன் கையாலேயே கமலிக்குச் சூட்டி விட்டாள்.
"நீ ஏன் நிற்கிறே? நீயும் இப்பிடிப் பக்கத்திலே உட்கார்ந்துக்கோ. சொல்றேன்" -
கமலி அப்படியே கட்டிலுக்குக் கீழே காமாட்சியம்மாளின் காலடியில் அமர்ந்தாள்.
"நீ ரொம்பக் கெட்டிக்காரி... எல்லாம் உன் மனசு போலவே நடந்திருக்கு. எனக்கும் இப்போ இந்த நிமிஷம் உன் மேலயோ அவன் மேலேயோ எந்த மனஸ்தாபமும் இல்லை. ஆனா மனஸ்தாபம் இருந்ததுங்கறது நிஜம். எனக்கு இப்போ மனசு திருப்தியா நெறைஞ்சு இருக்கு. நீயும், என் புள்ளையும் தீர்க்காயுஸா - படு சௌக்கியமா இருப்பேள் - அதிலே சந்தேகமில்லே. என்னமோ என் அக்ஞானம்... நான் முரண்டு பிடிச்சேன். குறுக்கே நின்னேன். இப்போ அதை நானே மறந்துட்டேன். நீயும் மறந்துடணும். மன்னிச்சிடணும்னுகூடச் சொல்வேன்."
"ஐயையோ நீங்கள் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நான் ரொம்பச் சிறியவள். உங்களிடம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியவள். நான் யாரு உங்களை மன்னிக்க?"
"நீ அகந்தையில்லாதவள்... நிஜமான படிப்பாளி. அதுனாலேதான் நான் இத்தனை கடுமையாச்