நாலு தினுசாப் பேசறத்துக்கு எடமாயிடுமோன்னோ?" - இது பெரியம்மா.
"நீங்க ரெண்டு பேரும் சித்தே பேசாமே இருங்கோ! எனக்கு மூளையே கொழம்பிப் பைத்தியம் பிடிச்சிடும் போலே இருக்கு பாட்டி!" என்று அழுகைக்கிடையே இருவரையும் வேண்டிக் கொண்டாள் காமாட்சியம்மாள். அவளை அவர்களால் அப்போது உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் என்ன மனப்போக்கில் இருக்கிறாள் என்பதை அறிய அவர்கள் செய்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
நாளைக்கு இரவு பாலிகை கரைக்கிறார்கள். நாளன்றைக்குப் பொழுது புலர்ந்தால் கிருஹப் பிரவேசம். காமாட்சியம்மாள் என்ன நினைக்கிறாள் என்பது யாருக்கும் புரியாத புதிராயிருந்தது. அவள் முகத்தில் தெம்பும் இல்லை. உடலில் சக்தியும் கிடையாது. கண்களில் அழுகையும் நிற்கவில்லை. யாரிடமும் மனம் விட்டு அவள் பேசவும் இல்லை.
கிருஹப்பிரவேசத்திற்கு முதல் நாளே முத்துமீனாட்சிப் பாட்டி, "நல்ல காரியத்திலே வெள்ளைப் புடவைக்காரி அங்கே நின்னா இங்கே நின்னான்னு இந்தாத்திலே எனக்குக் கெட்ட பேர் வரப்பிடாதுடீம்மா" - என்று காமாட்சியம்மாளிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டுப் போய் விட்டாள். முத்துமீனாட்சிப் பாட்டி போனபின் பார்வதியிடமும், குமாரிடமும், காமாட்சியம்மாளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத் தெரிந்தவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள் கிராமத்திலிருந்து வந்திருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மா.
காமாட்சியம்மாள் மிகவும் வைதிகமாகக் கட்டிக் காத்து வந்த சமையலறைக்குள் தங்களை நுழைய விடுவாளோ மாட்டாளோ என்கிற பயத்தில் பின்புறம் தோட்டத்தில் கீற்றுப் பந்தல் போட்டுச் சமையலுக்குக் கோட்டையடுப்பு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் சமையற்காரர்கள். மறுநாள் காலையில் கிருஹப்பிரவேசம் என்றால் முதல் நாள் இரவே தன் வீட்டுத் திண்ணையில் வந்து படுத்துக் கொள்ள விரும்பியும், ஒரு சுபமுகூர்த்தத்துக்கு முன்னால் அநாவசியமாகக் காமுவுக்கும் தனக்கும் சண்டை மூண்டு விடுமோ என்ற முன்னெச்சரிக்கையாலும், தயக்கத்தினாலும் சர்மா அதைத் தவிர்த்திருந்தார். வாசலில் கட்டியிருந்த வாழை மரங்களும் மாவிலைத் தோரணமும், செம்மண் கோலமும் தவிர வேறு கலகலப்போ ஆரவாரமோ பரபரப்போ இன்றி விளங்கியது அந்த வீடு. உள்ளேயிருந்த காமாட்சியம்மாள் வேதனையால் ஈனஸ்வரத்தில் முனகும் ஒலியும், இருமல்களும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அந்த வீட்டில்தான் மறுதினம் அதிகாலையில் கமலியும் ரவியும்