பாருவை ஆரத்திக்காக உஷார்படுத்த முன்கூட்டியே ஓட்டமும் நடையுமாக எதிர்கொண்டு வந்த வசந்தி திண்ணையில் காமாட்சி மாமியைப் பார்த்து வியப்பும் திகைப்பும் அடைந்தாள்.
"என்ன மாமி இது? இந்த உடம்போட நீங்க எதுக்கு இதெல்லாம் வந்து அலட்டிக்கறேள்...? போய்ப் படுத்துக்குங்கோ..."
"எனக்கு ஒடம்புக்கு ஒண்ணும் இல்லேடீ... வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் படுக்கையிலே விழிப்போடப் படுத்திண்டிருக்கப் பிடிக்கலே... வா... இப்பிடி உட்கார்ந்துக்கோ. ஆரத்தியை எடுத்துண்டுவரப் பாரு உள்ளே போயிருக்கா."
உள்ளேயிருந்து பார்வதி மஞ்சள் நீர்த் தாம்பாளத்தோடு வந்தாள். காமாட்சியம்மாளை வாசலில் பார்த்ததும் எடுத்த எடுப்பில் 'கலியாணப் பெண்ணையும் பிள்ளையையும் வீட்டுக்குள் விடமாட்டேன்' என்று சண்டை போட்டுத் தடுக்கத்தான் அந்த உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் எழுந்து வந்து உட்கார்ந்திருக்கிறாளோ என்று முதலில் எண்ணித் தயங்கிய வசந்தி சிறிது பேச்சுக் கொடுத்துப் பார்த்த பின்பே மாமிக்கு இடைஞ்சல் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்பதையும் அவள் தானாகவே கொஞ்சம் மனம் மாறிச் சுமுகமான நிலைமையில் தான் வந்து உட்கார்ந்திருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டாள். காமாட்சியம்மாளின் இந்தச் சிறிதளவு மனமாற்றம் கூட வசந்திக்குப் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. எதிர்பாராத புதிய திருப்பமாகவும் இருந்தது.
"என்ன மாமீ... குளிச்சேளா... ஈரத்தலையோட நுனி முடிச்சிப் போட்டிண்டிருக்கிற மாதிரித் தெரியறதே?" என்று மாமியின் தோற்றத்தைப் பார்த்து விசாரித்தாள் வசந்தி.
"ஆமாண்டி நல்ல நாளும் அதுவுமா 'அபிஷ்டு' மாதிரிக் குளிக்காமப் படுத்துண்டிருக்க முடியறதா?"
இப்படிக் காமாட்சியம்மாள் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே ஊர்வலமும் மனிதர்களும் வீட்டை நெருங்கி வந்திருந்தனர்.
சர்மா, ரவி, கமலி, வேணு மாமா எல்லோருக்குமே காமாட்சியம்மாளை ஆரத்தித் தட்டுடன்