அவர்களுக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள். குமார் அப்போதுதான் தூங்கி எழுந்திருந்து தோட்டத்துக் கிணற்றுக்கு நீராடப் போயிருந்தான். பளபளவென்று விடிந்து ஒளி பரவிக் கொண்டிருந்தது.
காமாட்சியம்மாள் ஏற்றிக் கொடுத்த தீபத்தை அப்படியே கைகளில் ஏந்தியபடி பின்புறம் கிணற்றடியில் துளசி மாடத்துக்குச் சென்றாள் கமலி. அடுத்த சில விநாடிகளில், துளசிமாடத்தருகே இருந்து,
"துளசி! ஸ்ரீசகி சுபே பாபஹாரிணி புண்யதே
நமஸ்தே நாரத நுதே நாராயண நம ப்ரியே..."
என்ற கமலியின் இனிய குரல் ஒலிக்கத் தொடங்கியது. அவள் துளசி பூஜையை முடித்துக் கொண்டு உட்பக்கம் திரும்பியபோது கூடத்தில் இயல்பை மீறிய அமைதி நிலவியது. ரவி, சர்மா, வேணு மாமா, வசந்தி, பார்வதி, குமார் எல்லோரும் காமாட்சியம்மாளின் படுக்கையருகே கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். கமலியும் அங்கே விரைந்தாள். காமாட்சியம்மாள் மயங்கினாற் போலப் படுக்கையில் சாய்ந்து துவண்டு கிடந்தாள்.
சர்மா காமாட்சியம்மாளின் பொன்நிற உள்ளங்காலில் சூடுபறக்கத் தேய்த்துக் கொண்டிருந்தார். எல்லார் முகத்திலும் கவலையும் பரபரப்பும் தெரிந்தன. ரவி அம்மாவின் கையைப் பிடித்து 'பல்ஸ்' பார்த்துக் கொண்டிருந்தான். வேணு மாமா குமாரைக் கூப்பிட்டு "டாக்டரைக் கூப்பிட்டுண்டு வா! ஓடு! வாசல்லே கார் நிக்கறது, உங்கம்மாவுக்கு இங்கிலீஷ் டாக்டர்ன்னாப் பிடிக்காது. ஆனாலும் பரவாயில்லே. வடக்குத் தெருவுக்குப் போய் எங்காத்துக்கு நாலு வீடு தள்ளி இருக்கிற டாக்டரைக் கூட்டிண்டு ஓடிவா" - என்று அவனை அவசர அவசரமாகத் துரத்தினார். குமார் ஓடினான். பார்வதி அதற்குள்ளேயே பயந்து அழத் தொடங்கியிருந்தாள். சர்மா காலைத் தேய்ப்பதை நிறுத்திவிட்டு வேணு மாமாவையும் ரவியையும் நோக்கி உதட்டைப் பிதுக்கினார். நேரே பூஜை அறைக்குப் போய் இது மாதிரிச் சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்கென்று காசிச் செம்பில் எப்போதோ சேமித்து வைக்கப்பட்டிருந்த கங்கா தீர்த்தத்தைக் கொண்டு வந்து காமாட்சியம்மாளின் வாயில் இரண்டு உத்திரணி சேர்த்தார். தீர்த்தம் கடை வாயிலும் கன்னங்களிலும் சரிந்து வழிந்தது.