இருந்தன. பல நாட்களாகச் சரியான உணவு இன்றி வெறும் கஞ்சியும், பழங்களுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த அம்மாவின் குரலிலோ, செயல்களிலோ மிடுக்கு இல்லை என்றாலும் தானே ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்தினாலும் நலிந்திருந்தும் வலிந்து பெறுவதற்கு முயன்ற சக்தியினாலும், காமாட்சியம்மாள் அந்த அதிகாலையில் அவ்வீட்டின் சுமங்கலியாகவும் கிருஹ லட்சுமியாகவும் பொலிவுடன் நடமாடிக் கொண்டிருந்தாள்.
கிராமத்துக்கே உரிய சோபையுடன் கிழக்குத் திசை வெளுத்துக் கொண்டிருந்தபோது, தெருக்கோடியிலிருந்து மேளம் நாதஸ்வர இசையுடன் கூட்டமாக மனிதர்கள் வரும் ஒலியரவங்கள் கேட்டன. காமாட்சியம்மாள் தெருத் திண்ணைக்கு வந்து எட்டிப் பார்த்துக் கமலியும் ரவியும் மற்றவர்களும் தான் வடக்குத் தெருவில் கல்யாண வீட்டிலிருந்து புறப்பட்டுக் கிருஹப் பிரவேசத்துக்காக ஊர்வலமாக வருகிறார்கள் என்று புரிந்து கொண்டாள். மகிழ்ச்சியாலும், வலிந்து ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்தினாலும் தனது உடல் நிலைக்கு மீறிய செயல்களை அப்போது அவள் செய்து கொண்டிருந்தாள். தலைசுற்றிக் கீழே மயங்கி விழுந்து விடாமல் திண்ணைத் தூணை இறுகப் பற்றிக் கொண்டாள்.
கண்களுக்கு நேரே பூச்சி பறந்தது. நெஞ்சு படபடவென்று வேகமாக அடித்துக் கொண்டது. உடம்பு நடுங்கியது. அப்போதுதான் குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்திருந்த பார்வதி அம்மாவைப் பார்த்துப் பதறிப் போய், "என்னம்மா இது? மயக்கமா வரதா? நிற்கவே தள்ளாடறயே?... உன்னை யார் இதெல்லாம் பண்ணச் சொன்னது? நான் பார்த்துக்கறேன். நீ பேசாமப் போய்க் கம்பளியைப் போர்த்திண்டு உள்ளே படுத்துக்கோ..." என்று இரைந்தாள்.
"கத்தாதேடீ! இப்ப எனக்கு ஒண்ணுமில்லே... உள்ளே சுவாமி படத்தண்டே தாம்பாளத்திலே ஆரத்தி கரைச்சி வச்சிருக்கேன்... போய் எடுத்துண்டு வா..." என்று மிகவும் தளர்ந்த குரலில் காமாட்சியம்மாளிடமிருந்து பதில் வந்தது.
பறவைகளின் கலவையான எழுச்சிக் குரல்களும், அதிகாலைக் குளிர்ச்சியும் மூன்றாவது வீட்டில் யாரோ ஒரு மூத்த வைதிகர் வேதம் சொல்லிக் கொண்டிருந்த கணீரென்ற குரலும் நாதஸ்வரக்காரரின் பூபாளமுமாக அந்த வைகறையை அதிகம் அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டிருந்தன.
அக்கம்பக்கத்திலும் எதிர்வரிசையிலும் வீடுகளில் எழுந்து வந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள்.