கிருஹப்பிரவேசம் செய்யப் போகிறார்கள் என்பதற்கான முன்னறிகுறி எதுவுமே இல்லாதிருந்தது. அக்கம் பக்கத்தார் வந்து போகிற கலகலப்போ ஆரவாரமோ கூட அப்போது அவ்வீட்டில் இல்லை.
மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கே காமாட்சியம்மாளுக்குத் தூக்கம் கலைந்து விழிப்பு வந்து விட்டது. தற்செயலாக அன்று வெள்ளிக்கிழமை வேறு. அம்மாவுக்குத் துணையாகக் கல்யாண வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து படுத்திருந்த பார்வதியும், குமாரும் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். காமாட்சியம்மாள் தான் முதலில் விழித்துக் கொண்டிருந்ததனால் தட்டுத் தடுமாறி எழுந்திருந்து கிணற்றுப் பக்கம் சென்றாள். அப்போது அவளைத் தடுப்பதற்கு அந்த வீட்டில் யாரும் இல்லை. அதிகாலைக் குளிர்காற்று சில்லென்று முகத்தில் வந்து உராய்ந்தது. தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களின் வாசனையைச் சுமந்து கொண்டு வந்து பரப்பியது அந்தக் காற்று. கிணற்றில் தானே தண்ணீர் இறைத்து நீராடினாள் காமாட்சியம்மாள். உள்ளே திரும்பி வந்து விசேஷ நாட்களில் தான் விரும்பி அணியும் கருநீல நிறத்துச் சரிகைப் பட்டுப் புடவையை அணிந்து தலையைத் துவட்டி ஈரத்தோடு நுனி முடிச்சுப் போட்டு நெற்றிக்குத் திலகமிட்டுக் கொண்டாள். மாட்டுத் தொழுவத்துக்குப் போய் பால் கறந்து வைத்தாள். தோட்டத்தில் போய் பூக்கொய்து கொணர்ந்து தொடுத்துக் கொஞ்சம் தன் தலையில் செருகிக் கொண்டு மீதத்தை அப்படியே வைத்தாள். வீட்டின் புராதனமான ஆகிவந்த வெள்ளித் தாம்பாளத்தை உள்ளேயிருந்து எடுத்துத் துலக்கி அதில் ஆரத்திக்கு மஞ்சள் நீர் கரைத்து வைத்தாள். வாசல் தெளித்துக் கோலம் போட்டாள்.
பார்வதி கண் விழித்த போது அம்மாவே எழுந்து நீராடிய கூந்தல் ஈரம் புலராமல் கூடத்திலிருந்து குத்து விளக்கு ஏற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனாள்.
"இந்த உடம்போட உன்னை யாரும்மா எழுந்திருக்கச் சொன்னது! ஐயையோ... பச்சைத் தண்ணியிலே குளிக்க வேறே செஞ்சிருக்கியா? ஏம்மா இதெல்லாம் பண்ணினே? அதான் இதெல்லாம் கவனிக்கிறதுக்குன்னு நான் வந்திருக்கேனே?"
"சரிதான் போடீ... நீ பெரிய மனுஷி! உனக்கென்ன தெரியும்டீ இதெல்லாம்... போ... நீயும் போய்ச் சீக்கிரமாக் குளிச்சிட்டு வா..."
அம்மாவின் இந்தத் திடீர் மாறுதலும் உற்சாகமும் பார்வதியால் உடனே நம்ப முடியாதபடி