சோதனை பண்ணினப்புறமும் நீ எங்கிட்டப் பவ்யமாக இப்பிடிச் சொல்றே. பரவாயில்லே இப்போ நான் உங்கிட்ட ஒண்ணே ஒண்ணு மட்டும் வேண்டிக்கிறதுக்கு மீதம். இருக்கு."
"நீங்கள் வேண்டிக் கொள்ளக் கூடாது, உங்கள் மருமகளுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்" -
"நான் வேண்டுதல்னுதான் சொல்லுவேன்ம்மா! நீ உத்தரவுன்னு எடுத்துண்டா அதைப்பத்திச் சந்தோஷப்படறேன்."
"உன்னைப்போல் நான் இந்தாத்து மாட்டுப் பொண்ணா உள்ளே நுழைஞ்சப்போ என் மாமியார் எனக்கு எதைச் சொன்னாளோ அதை நான் உனக்குச் சொல்லியாகணும்! ஆனா ஒரு வித்தியாசம், நாங்கள்ளாம் இந்த தேசத்துக்காரா. நீ வேற தேசத்திலேருந்து வந்துருக்கே. இந்தத் தேசத்து ஆசார அநுஷ்டானங்களைப் புரிஞ்சுண்டிருக்கே. கொண்டாடறே. படிப்பும் பணிவும் சேர்ந்து அமையறது கஷ்டம். உங்கிட்ட ரெண்டுமே அமைஞ்சிருக்கு."
"எப்போது அக்கினி சாட்சியாக உங்கள் பிள்ளையைக் கல்யாணம் செய்து கொண்டு நான் உங்கள் மருமகள் ஆகிவிட்டேனோ அப்புறம் என்னை ஏன் வேறு தேசம் என்று நீங்கள் சொல்லணும்?"
"இனிமே அப்படிச் சொல்லலேடீ! தேசம் எதுவாயிருந்தா என்னம்மா? பிரியம், பாசம், உபகாரம், மனுஷத்தன்மை, சத்யம், சகிப்புத் தன்மை, நியாயம், சிரத்தைங்கறதெல்லாம் அத்தனை தேசத்துக்கும் ஒண்ணுதான். இந்த தேசத்துக்காராளைவிட இந்த தேசத்து விஷயங்கள்ளே உனக்கு அதிகமான பக்தி சிரத்தை இருக்குன்னு கோர்ட்டிலேயே தீர்ப்பாயிருக்குன்னு எல்லாரும் பேசிண்டா.
"என் ஆசையெல்லாம் வேறொண்னுமில்லே. என் பிள்ளையோட நீ இங்கேயே கிருஹலட்சுமியா இருந்து இந்தாத்துலே பெற்றுப் பெருக்கி விளக்கேத்தணும்கறதுதான். இது கலப்புக் கல்யாணம். இங்கே இருக்கறவா - பார்க்கறவா - கொறை சொல்லிண்டே இருப்பான்னு தயங்கியோ பயந்தோ வேற தேசத்திலேயே நிரந்தரமா இருந்துடலாம்னு நீ நெனைக்கப்படாது. இங்கேயே இருந்து இந்தாத்திலே விளக்கேத்திண்டு வரணும். புருஷா அக்னி சந்தானம் ஔபாசனம்னு பண்ணி நெருப்பு அணையாமக் காத்துண்டு வர மாதிரி இந்தக் குடும்பத்திலே