(Reading time: 13 - 26 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

சரோசா, அந்தச் சுவருக்கு அடுத்தபக்கம், வாளி மாதிரி இருந்த வட்டச்சுவரில் அதன் குறுக்காய் நின்ற இரும்புப் பிடியை பிடித்ததபடியே ஒரு காலை நீட்டிப் போட்டாள். அப்போது கால் தடுமாறி, அவள் அந்தக் கிணற்றுக்குள்ளேயே விழுந்திருப்பாள். நல்ல வேளை, அடுத்த காலையும், அங்கே போட்டு, கைப்பிடியை நழுவ விடாமல் 'சைடில்' குதித்தாள். ஏதோ ஒரு சினிமா ஸ்டண்ட் நடிகையை மனதில் நினைத்தபடி கைகால்களை உதறி விட்டுக்கொண்டாள். எதிரே, ஒரு பங்களா, கேட்க ஆளில்லாமல் கிடந்தது போல் இருந்தது. அந்த வீட்டுக்கார ஆசாமி குடும்பத்தோடு நேற்று 'தொம்மாந்தூண்டு காரில்' (மாருதி) பெட்டி படுக்கையோடு போனது போல் இருந்தது.

   

ஆப்பிரிக்க மக்களின் தலைமுடிபோல், தரையோடு சுருண்டு கிடந்த புற்கள் கால் உரச, தங்கரளிச் செடிகள் தோளுரச, கருவேல மரங்கள் தலையுரச, எருக்கம்பூக்கள் இடையுரச, அவள் அந்தப் பகுதி வழியாக நடந்து, மூன்றாவது குறுக்குத் தெருவில், நின்று நிதானித்த பிறகு, அந்தப் பங்களாவை நோக்கிப் போனாள்.

   

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களால் ஏப்பம் விடப்பட்டு, இப்போது வாங்கியவருக்கு குழி வெட்டக்கூடப் போதாத அளவுக்குக் கிடந்த ஒரு காலி மனை வழியாக இரும்பு வேலி போட்ட அந்தப் பங்களாவை நெருங்கினாள். நான்கைந்து சிமெண்ட் தூண்களுக்கு இடையே, வலைபோல் சன்னஞ் சன்னமாய் பின்னப்பட்ட இரும்புக் கம்பிகளை, கொய்யாக்காயை கடித்துக் கொண்டே பசியோடு பார்த்தாள். தரையில் பலமாகக் கால் ஊன்றி, இரண்டு கைகளால், அந்த இரும்பு வலைக் கம்பிகளை இழுத்தாள். ஏற்கனவே மக்கிப் போயிருந்த இரும்புக் கம்பிகள், தொடப் பொறுக்காதவைபோல் சரிந்தன. கோணல்மாணலாய், வட்ட வட்டமான அந்தக் கம்பி வலைகளை புடவையை மடிப்பது போல் மடித்து, வளைத்து, கோணிப் பையின் வயிற்றுக்குள் போட்டாள். மூன்றடி நீளமுள்ள சிமெண்ட் தூண்களில் பின்னிக் கிடந்த இரும்புக் கம்பிகள் மட்டும் அவள் இழுத்த இழுப்பிற்கு மசியவில்லை. அவள் உள்ளங்கையில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். அவளுக்கும் அதைப் பார்த்து ரத்தக் கோபம் வந்தது. இரும்புத் தடியை எடுத்து, சிமெண்ட் சுவர்களை தட்டித்தட்டி, மட்டந்தட்டி, அவற்றில் சுருண்டு கிடந்த கம்பிகளை குறுக்காகவும், நெடுக்காகவும் மடித்து 'காவலிலிருந்து' விடுவித்து கோணிப் பைக்குள் சிறைப் படுத்தினாள். பின்பக்கமுள்ள கதவைப் பெயர்க்கலாமா என்றும் யோசித்தபடி, தலையை தோளோடு சேர்த்து முன்னும் பின்னுமாக ஆட்டினாள். ஏதோ ஒரு சினிமாக்காரி, ஒரு படத்தில் இப்படி ஆட்டியதாக அவளுக்கு ஒரு ஞாபகம். பிறகு, 'சீ... பாவம்' என்று 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.