Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 02 - சு. சமுத்திரம்
கண்ணாடி ஊசிகள் கால் செருப்பையும் துளைத்து பாதங்களில் குத்த, சரோசா அந்த குண்டு குழி நிலத்தில் குதித்து எவருக்கும் சந்தேகம் வராதபடி, வேகவேமாய் நடந்து, இரண்டாவது குறுக்குத் தெருவின் விளிம்பை மிதித்தபோது 'தொப்' என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தவள், திடுக்கிட்டு தோளைக் குலுக்கினாள். அந்த 'எச்சிக்கல' கீழே குதித்து தரையில் விழுந்து, நெளிந்து எழுந்து, அவளை நோக்கிப் பாய்ந்து வருவதைப் பார்த்தாள். அவன் தோற்றத்தைப் பார்த்ததும் லேசாய் பயந்து விட்டாள். உருண்டு திரண்ட உருளை மாதிரியான உடம்பு. பாக்கு மரம் மாதிரி துவங்கி, வேல் கம்புகள் மாதிரி முடிந்த விரல்கள். பேண்ட் சிலாக்கிற்குள் திமிறிக் கொண்டிருக்கும் உடல்வாகு. கசரத் எடுத்தவனோ அல்லது கராத்தே கிராத்தே என்கிறார்களே அப்படிப்பட்டவனோ? பேஜாரு கஸ்மாலமோ?
சரோஜா தனது 'ஏரியா ஆட்கள்' எவரும் அந்தப் பக்கம் திரிகிறார்களா என்பது போல் கண்களைச் சுழல விட்டாள். உடம்பைச் சுற்ற விட்டாள். காணவில்லை. அவனோ 'ஏய்... ஏய்' என்று கத்தியபடி, எகிறி வந்தான். அவள் கண்டுகொள்ளாமல், கால்களுக்கு இடையே மூன்றடி இடைவெளி கொடுத்து நடந்தாள். நடப்பது போல ஓடினாள்.
சரோசா அவசரத்தில் 'ஏரியா' இருந்த திசையைப் பார்த்து நடக்காமல், ரைட்டுக்குப் பதிலாய் லெப்டுக்கு திரும்பி விட்டாள். ஆனால் அது ஒரு முட்டுச் சந்து. இரண்டு பக்கமும் நெருக்கமான வீடுகளாலும், இறுதியில் அந்த இரண்டு பக்கங்களையும் இணைப்பது போல் மூன்று வீடுகளை வரிசையாய் கொண்டு மேற்கொண்டு போகமுடியாமல் முட்டிப் போன தெரு. சரோசா வலது கை கோணிப் பையை இடது கைக்கு மாற்றிக் கொண்டு, யோசித்தாள். அந்தப் பக்கம் ‘ஜம்ப்' பண்ணமுடியாது. போதாக் குறைக்கு நடு வீட்டுக்கு முன்னால் ஸ்டூல் போட்டு ஒரு கூர்க்கா உட்கார்ந்திருந்தான். அவள் திரும்பி நடந்தாள்.
இளங்கோவை நோக்கி, எதுவுமே நடக்காதது போல் ஓரங்கட்டி நடந்தாள். கீழே கிடந்த ஒரு பேட்டரி செல்லை பொறுக்கி கோணிக்குள் போட்டுக் கொண்டு, 'பாவலா' செய்தபடி அவனைப் பார்க்காதது போல் பார்த்து, நடக்காதது போல் நடந்தாள். அவள், அந்த குறுக்குத் தெருவில் தெற்குப் பக்கமாகத் திரும்பப் போனபோது, அவன், அவள் முன்னால் போய் இரண்டு கைகளையும் சிலந்திக்கால்கள் மாதிரி குவித்துக் கொண்டு நின்றான். அவள் பிறருக்குக் கேட்காத - அதேசமயம் அவனுக்குக் கேட்கும் - கிசுகிசுப்புக் குரலில் -