"வழிய விடு சாரே..."
"எச்சிக்கலன்னு சொல்லிட்டு இப்ப சாரா போடுறே... ஒன்ன விடமாட்டேன்."
"என்ன சாரே... வம்பு பண்றே. ஒன்ன எதுக்கு நான் அப்படி சொல்லணும்? நீ...அடையாளம் தெரியாம பேசறேன்னு நினைக்கேன். ஒன்னை எதுக்கு நான் திட்டணும்? நீ என் மாமனா, மச்சானா, எதிரியா?"
"யாருமில்ல! நீ அடிச்சுப்போட்டுட்டு வந்திருக்கியே, அவங்களோட மகன். ஒன்னை போலீஸ்ல ஒப்படைக்கப்போற சமூகத் தொண்டன்.”
சரோசா, அவனை நேருக்கு நேராய் பார்த்தாள். தோற்றத்தில் வஸ்தாதுதான். ஆனால், தோரணையைப் பார்த்தால் ஒரு குயந்தே... டபாச்சுடலாம். அவள் இப்போது நாலு பேருக்குக் கேட்கும்படி சத்தம் போட்டாள்.
"யோவ்... பட்டப்பகலுல ஒரு வயசுப் பொண்ணு கிட்டயா வாலாட்டறே? தோ பார்... என்ன தொட்ட அப்புறம் தெரியும் மவனே."
இருவரும் சடுகுடு ஆடுவது போல் ஒருவரையொருவர் ஆழம் பார்த்தார்கள். அவள், அவன் கைகளுக்கு அப்பால் நடக்கப்போனபோது, அவன் கரங்கள் அனுமார் வாலாய் நீளுவது போல் தோன்றியது. உடனே அவள் 'டேய்... டாய்' என்று தெருவோர்க்குக் கேட்காமல் அவனுக்கு மட்டுமே கேட்கும் சின்னக்குரலில் பேட்டைத்தனமாக உறுமினாள். அவனோ முகத்தில் எந்தச் சலனத்தையும் காட்டாமல் அம்மாவுக்கு மட்டுமே கட்டுப்பட்ட கர்மயோகிபோல் சரோசா அசைந்த விகிதாச்சாரத்திற்கு எதிர் விகிதாச்சாரத்தில் அல்லாடிக் கொண்டிருந்தான். இதனால் சரோசாவும் ஒரு அசைக்க முடியாத முடிவுக்கு வரவேண்டியதாயிற்று.
சரோசா, அவன் நெடுங்கையை ஒருபுறமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டாள். அவன் பதிலுக்கு அவள் கைகளைப் பிடிக்கப் போனான். பிறகு கூச்சப்பட்டு, அவள் கைபிடித்த கோணியைப் பிடித்து இழுத்தான். அவளோ, அவனை மாறி மாறித் தள்ளினாள். அவளை அப்படித் தள்ள முடியாத கூச்சத்தில் இருந்த அவன், ஒத்தாசைக்கு ஆள் கிடைக்குமா என்று அங்குமிங்குமாய் பார்த்த