அறியாத பையன நாய் மாதிரி அடிச்சுப் போட்டுட்டுப் போறியேடி... பாவி! ஆம்புளய கை நீட்டலாமாடி? என்ன தினாவட்டா நடக்கறாள்? என்ன பிள்ளாண்டாப்பா நீ...? என்ன ஆம்புள நீ?"
இளங்கோ, அடி கொடுத்த வலியைவிட, அவள் கொடுத்த வலியில் அல்லாடினான். போதாக் குறைக்கு, ஜன்னல்கள் வழியாக எல்லோரும் அவனை ஏளனமாய் பார்ப்பது போல் இருந்தது. இப்போது, அவளைப் பார்த்து ஓடினான். அவளுக்கு முன்னால் எதிர் திசையில் வந்த பேண்ட் ஸ்லாக் பேர்வழிகளின் காதுகளில் விழும்படி கத்தினான்:
"அதோ போறாளே... அவள் திருடி... பொம்பள ரவுடி... பிடிங்க சார் ; பிடிடங்க..."
பேண்ட்-ஸ்லாக் பேர்வழிகளும், அவளைப் பிடிக்கப் போவது போல் கடிகாரக் கைகளை செங்குத்தாய் நீட்டி, முன் கைகளை கொக்கிகள் போல் மேலே கொண்டுபோய் குவித்து, சாலையை அடைப்பது போல் வழிமறித்தார்கள்.
உடனே சரோசா, சர்வ சாதாரணமாக, கோணிப் பைக்குள் கையை விட்டு, இரும்புத் தடியை எடுத்து, வலது கையில் பிடித்து, தோளுக்கு மேல் உயர்த்தி, தன்பாட்டுக்கு நடப்பது போல் நடந்தாள். சாலை மறியல்காரர்கள் அவளுக்கு பயபக்தியுடன் வழி விட்டார்கள். 'பிடிங்க பிடிங்க' என்று குரல் கொடுத்து ஓடிவருபவனை எரிச்சலோடு பார்த்தபடி நடையைத் தொடர்ந்தார்கள்.
இதற்குள், ஒரு திட்டிலில் போய் நின்று திரும்பிப் பார்த்தாள் சரோசா. அவனைப் பார்த்து 'டாடா' காட்டிவிட்டு, கார்ப்பரேஷன் மைதானத்திற்குள் நுழைந்து, அதற்கு அப்பால் உள்ள கட்டிடக் குவியல்களுக்குள் மறைந்து கொண்டிருந்தாள்.
முட்கம்பிகள், பேண்டை துவாரங்களாக்கி, அவற்றில் ரத்தத் துளிகளை மேலோங்கச் செய்தபோது, இளங்கோ, அப்படியே திகைத்து நின்றான். பின்னால் கடாமுடா சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
ஒரு ஆட்டோரிக்ஷாவில் இரண்டு சிவப்புத் தொப்பிகளும், அவன் அம்மாவும் வந்து கொண்டிருந்தார்கள். அந்த ஆட்டோவை வழிமறித்து 'பத்து பாத்திரக்காரி' ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.