எதிர்வீட்டம்மாவுக்கு, இன்னும் கிராமத்து மண் வாசனை போகவில்லைதான். ஆனாலும், அவளால் அடாவடியாய் பேசத்தான் முடிந்ததே தவிர, அடிதடியில் இறங்க மனமில்லை. அதோடு, இவள் அசல் ரவுடி மாதிரி தெரியுது. ஆளுதவி கிடைக்குமா என்று அந்தம்மா, அக்கம்பக்கம் பார்த்தாள். அத்தனை ஜன்னல்களும், 'பட்டுபட்டு' என்று மூடின. “அடிப்பாவிகளா" என்று அனைத்து வீடுகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்துக் கத்தினாள். பிறகு வீட்டுக்குள், தனது அருந்தவப் புதல்வி மல்லிகா இருப்பது நினைவுக்கு வந்தது. சரோசாவை கோணிப் பையோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு கத்தினாள். 'திருடி... திருடி... ஓடியாங்க... ஓடியாங்க..!
ஆனாலும், சில வீடுகளில் வாசல்கள் திறக்கப்பட்டு சில பெண்கள் அவற்றை அடைத்து நின்றார்கள். சிலர் வெளியே வந்தார்கள். ஆனால் வீதிக்கு வரவில்லை. காரணம், அவர்கள் வீடுகள் அசல் காம்பவுண்ட் சுவர்களால் அரண் கொண்டவை. இரும்புக் கம்பிகள் இல்லாத சுவர்க்காரிகள். அவர்கள் வந்த விதமும், பக்கத்து வீட்டுக் காரிகளை கையாட்டிக் கூப்பிட்ட தோரணையும் ஒரு சண்டை சினிமாவைப் பார்க்கப் போகிற ரசனையோடு நிற்பது போல் தோன்றியது. அந்த அம்மாவைப் பார்க்காமல் அந்தப் பெண்ணைப் பார்த்த பார்வை, அவளே வெற்றிபெற வேண்டுமென்று நினைப்பது போலவும் இருந்தது. எல்லோரையும் அடக்கி வைப்பது போல் அந்தத் தெருவே குலுங்கும்படி குரலெழுப்பும் அந்த அம்மாவுக்கு எதிர்க்குரல் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வது போல் நின்றார்கள். சிலர் தொலைநோக்காய் பிரச்சினையை அணுகி வருத்தப்பட்டாலும், பலர் இந்த மாதிரியான சண்டைக்காக தத்தம் வீடுகளிலும் சில சில்லரைத் திருட்டுகள் நடந்தால்கூட பரவாயில்லை என்பது போல் பார்த்தார்கள்.
"ஏய் மல்லி! போலீசுக்கு போன் பண்ணிட்டு இங்க வாடி. முவள விடப்படாது. முதல்ல போன் போடு."
போலீஸ் என்றதும், சரோசாவுக்கு லேசாய் பயம் பிடித்தது. ‘ஏரியா போலீஸ்' என்றால் பயமில்லை. ஒருவேளை அவசர போலீசுன்னா, ஆபத்தாச்சே.
உள்ளே, ஒரு மாத நாவலை மெய்மறந்து படித்து, ஒரு கற்பனைக் காதலனுடனோ, அல்லது நிசக் காதலனை நினைத்துக் கொண்டோ, ரசித்துக் கிடந்த மல்லிகா, வெளிவந்து எட்டிப்