தனக்குள்ளேயே பேசியபடி, அந்த இடத்தைவிட்டு நிதானமாக வெளியேறப் போனபோது -
“ஏய்... நில்லுடி..."
சரோசா, கோணிப் பையை முதுகில் சாத்தியபடியே குரல் வந்த எதிர்த் திசையை நோக்கி ஏடாகூடமாய் பார்த்தாள். அங்கே குரல் கொடுத்துக்கொண்டிருந்தவளை விட, அந்த வீட்டின் முனையில் சவருக்கு மேலே உயர்ந்த பப்பாளிப் பழங்களே, அவள் கவனத்தைத் கவர்ந்தன.
"ஏய்... தடிமாடு... கோணிக்குள்ளே என்னடி வைச்சிருக்க? இங்க வாடி..!"
சரோசா, எதிர்த்திசையை எதிரித் திசையாகப் பார்த்தாள். பங்களா மாதிரி பெயர்ப் பலகையோ, நாயோ இல்லாமல், கிராமத்து வீடு மாதிரி 'பேஜாரான' சோடனைகளோடு, எருமை மாடு படுத்துக் கிடப்பது போல் இருந்த அந்த வீட்டை உற்றுப் பார்த்தாள். அதிலிருந்து வெளிப்பட்டவளின் தோற்றத்தைப் பார்த்து, சரோசா பதறவில்லை- யானாலும், பயந்து விட்டாள். வழக்கமான பங்களாக்காரிகள் மாதிரி இது தளதள கொழுகொழுக்காரி இல்லை. இறுகிப்போன உடம்பு. இளையராசா மெட்டு மாதிரி அடித் தொண்டைக் குரலு. 'படா காலு, படாகையி ஒரு நாட்டுப்புறம், இந்த வீட்டுப் புறத்துக்கு வந்திருக்கு...
சரோசா, தனது அனுபவங்களை ஒட்டுமொத்தமாக உள்ளத்திற்குள் கொண்டு வந்தாள். முதலில், திருடிய இடத்தைவிட்டு எகிறணும். அப்பால அக்கம்பக்கத்து 'கஸ்மாலங்க' கூடும் முன்னால, கைகால விரிச்சுப்போட்டு ஓடாதது மாதிரியும், நடக்காதது மாதிரியும் போகணும். அதே சமயம், அந்த ‘கெய்விக்கு’ பயப்படாதது மாதிரியும் 'தில்லா'ப் பார்க்கணும். ஆனாலும், அதுக்கு மரியாதி கொடுக்கிறது மாதிரி தலைய ஓரங்கட்டி லேசாச் சிரிச்சு நழுவணும்.
சரோசா, பழைய அனுபவங்களை செயல்படுத்தும் வகையில், அவளை 'தில்லாய்' பார்த்து, சும்மாங்காட்டியும் சிரித்து, நடந்த போது, எதிர்வீட்டு அம்மா, அவளுக்குப் புதிய அனுபவத்தைக் கற்றுக் கொடுக்கப் போகிறவள் போல்‘சாலையில்’ வந்து நின்றவளை இரண்டு கையையும் குறுக்காய் நீட்டி வழிமறித்து, வாயைப் பேசவிட்டாள்.
"ஏண்டி திருட்டு முண்ட! இந்த உடம்பை வைச்சுக்கிட்டு, இப்படி ஏண்டி பொழப்பு நடத்தறே?