பார்த்துவிட்டு உள்ளே அவசர அவசரமாய் ஓடி, டெலிபோன் பக்கம் போனது தெரிந்தது. உடனே, அவள் அம்மாவும் திமிறிக்கொண்டிருந்த சரோசாவை வலுக் கட்டாயமாக, மூச்சுமுட்ட இழுத்துக் கொண்டிருந்தாள்.
சரோசா, வழிமறித்தவளை மல்லாக்கத் தள்ளப்போனாள். பிறகு அது கொலைக் கேசாகிவிடும் என்று அந்த நேரத்திலும் நினைத்து, அவள் ஒரு கையை பிடித்துத் திருகி, ஒரு ஓரமாகத் தள்ளி, அவள் இரண்டு கால்களையும் தனது கால்களால் தட்டிவிட்டு, கீழே ஆரஅமரக் கிடத்திவிட்டு, நடந்தாள்.
ஒரு கையை கீழே ஊன்றியபடி விழுந்த அந்தம்மா, அந்தக் கை ஒடிந்துவிட்டதா, அல்லது பிசகிவிட்டதா என்று தெரியாமல் அந்தக் கையையே பார்த்தபடி “அய்யோ, அம்மா, அய்யோ... அம்மா..." என்று அரற்றினாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. மல்லிகா அங்கே அலறியடித்து வந்து அம்மாவைத்தான் பிடித்தாளே தவிர, "அவளை பிடிடி, பிடிடி" என்று அந்த வேதனையிலும் ஒரு சாதனையை நடத்தச் சொன்ன தாய்காரியின் ஆணையை அவளால் நிறைவேற்ற முடியவில்லை. பாதி, பயம்; மீதி, அசல் சோம்பம்.
சரோசா, கை நழுவி விழுந்த கோணி மூட்டையை மீண்டும் தூக்கிக்கொண்டு எகிறிக் குதித்த சுவர் பக்கமாய் ஓடியபோது, அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபன், அம்மா கீழே கிடப்பதைப் பார்த்து வாகனத்தை ஆப் செய்யாமலேயே, நிறுத்தி வைத்துவிட்டு “என்னம்மா, என்னம்மா" என்று கேட்டுக்கொண்டே, அம்மாவை தூக்கப் போனான். அவளோ, மகன் கிடைத்த மகிழ்ச்சியில் வலியை கரைத்துக்கொண்டு ஆணையிட்டாள் :
"அதோ ஓடுறா பாரு... அவள் திருடி... கேடி... என்ன அடிச்சுப் போட்டுட்டு ஓடுறா. அவனைப் போய் பிடிச்சுட்டு வாடா. பிடிச்ச கையோட இங்க இழுத்துட்டு வாடா."
சரோசாவை, தன் முன்னால் இழுத்துக்கொண்டு வரப்படும் வரை எழுந்திருக்கப் போவதில்லை என்பது போல், அம்மாக்காரி அப்படியே கிடந்தாள். மல்லி, அந்தச் சமயத்திலும், மாத நாவலின் ஒரு உச்சகட்டப் பகுதியை படித்துக் கொண்டு நின்றாள். ஆனால் தாய்சொல் தட்டாத தனயனான இளங்கோ ஓடினான். அவள் ஓடிய பக்கமாக அவளைவிட வேகமாக ஓடினான். இதற்குள், சரோசா அந்தக் கிணற்றுச் சுவரில் ஏறி, வேலிச்சுவரில் தாவி, வெற்றிக்களிப்போடு நின்றபடி அவனைப் பார்த்தாள். அவன் நெருங்கிக்கொண்டிருந்தபோது, அட்டகாசமாகச்