அப்படி இப்படி நடந்துகிட்டால், தேறலாம். நீ என்னடான்னா உதவி செய்ய வந்த என்னையே வம்புக்கு இழுக்கிறீயே."
பாக்கியம், பிரமை பிடித்து நின்றாள். இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று எதிர்பார்த்தே, அதற்குப் பயந்து கணவன் ஓடிவிட்டதாக நினைத்து மனதிற்குள் கணவனைத் திட்டினாள். பிறகு மகனை மலங்க மலங்கப் பார்த்தாள். அவனையே சுற்றிச் சுற்றி வந்தாள். போலீஸ்காரர் அபயம் அளித்தார்.
"வழிய விடுங்கம்மா... இப்பவும் எதுவும் குடிமூழுகிப் போயிடல. உங்க பைனை நைட்ல ஜாக்கிரரையா பார்த்துக்க வேண்டியது என்னோடது. நீங்க காலையில வாங்க. பார்க்க வேண்டியவங்களை பக்குவமா பாருங்க. எல்லாம் சரியாயிடும். பாவம் சரோசா பொண்ணு. இவரு தள்ளிப் போட்டதுல அவளுக்குப் பிடரியில ஒரே ரத்தம். எதுல காயம் வந்தாலும் பிடரியில் மட்டும் காயம் வரக்கூடாது. ஏன்னா அது உயிரோட கூட நிக்கும். ஆனாலும், கேஸ் இன்னும் ரிஜிஸ்டர் ஆகல. சரி... நடப்பா."
பாக்கியம், மகனையும் அந்த காவலரையும் ஒருசேரப் பார்த்தாள். அவளுள் இருந்த நகரத்துப் பெண் விலகி, கிராமத்து நாட்டாமைப் பெண்ணுக்கு வழி கிடைத்தது. கணவனைப் பார்த்து கர்ஜிப்பாளே அதேமாதிரி கர்ஜித்தாள் :
"சரி வாங்க போகலாம். நானும் வாரேன். என்னதான் நடக்குதுன்ன பார்த்துடலாம். ஏய் மல்லி, கதவைப் பூட்டிக்கடி. இல்லாட்டி திறந்த வீட்ல யாராவது, 'ஏதோ மாதிரி' நுழைஞ்சு வம்புக்கு இழுப்பாங்க. இரண்டுல ஒண்ண பார்க்காம் நான் இன்னிக்கி விடப்போறதுல்ல. உங்கப்பா வந்தால் கதவ திறக்காதடி. அவரோட புத்திக்கு ரோட்டுல தூங்கணும். டேய் இளங்கோ, நட்டா! என்னதான் நடத்தறாங்கன்னு பார்த்துடலாம்.”
அந்தப் போலீஸ்காரருக்கு கோபம் வரத்தான் செய்தது. ஆனால், அழுது கொண்டே பின்னால் வருவாள் என்று எதிர்பார்த்த அந்த அம்மாள், வயதான கண்ணகி போல் பேசுவது கண்டு அதிர்ந்து போனார்.
போலீஸ்காரர் முன் நடக்க, தாயும் மகனும் பின் நடக்க, முன்னால் நடந்த போலீஸ்காரர் ஆழம் பார்த்துப் பேசினார்.