Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 06 - சு. சமுத்திரம்
இளங்கோவின் அம்மா, பாக்கியம் வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயுமாய் அல்லாடினாள். ஒன்பது மணிக்கே படுத்துக் கொள்ளும் இளங்கோ, இரவு பத்து மணியை தாண்டியும் வீட்டுக்கு வராதது, அவளுக்கு அந்த வீடே ஒரு காடு மாதிரி தோன்றியது. கேட்டை இழுத்து வெளியே வந்து, தெரு முனை வரைக்கும் கழுத்தை வளைத்துப் பார்த்தாள்.
தேக்கு சோபா செட்டில் கால்மேல் கால்பின்னி அவள் கணவர் சுப்பையா எதிலும் சம்பந்தப்படாதவர் போல், சாய்ந்து கிடந்தார். அவருக்குப் பக்கத்தில் சபாரி உடையில் கால் மேல் கால் போட்டு, தலைமுடிக்கு 'மை தீட்டி' உட்கார்ந்திருந்த மிஸ்டர் ரமணனை மனதிற்குள் திட்டிக்கொண்டே ஒப்புக்குச் சிரித்துப் பார்த்தாள். இந்த சோபாசெட்டோடு ஒட்டி, எதிரே போடப்பட்டிருந்த இரண்டு துண்டு நாற்காலிகளில் பாவாடை தாவணி மல்லிகாவும், சேலை கட்டிய பாமாவும் எதையோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். பாக்கியம், அவர்கள் சத்தம் அடங்கும்படி புலம்பினாள்:
"என் பிள்ளைய காணுமே; எனக்குப் பயமா இருக்கே. ரோஷத்துல எங்கேயும் ஓடிப் போயிருப்பானோ? ஒருவேளை மருந்த சாப்பிட்டுட்டு-இல்லாட்டி அந்தப் பொம்பள ரவுடி அவன அடிச்சுப் போட்டிருப்பாளோ; ஏங்க, உங்களைத்தான், அவனைத் தேடிப் பார்த்துட்டு வாங்களேன்.'
சுப்பையா ஒல்லி மனிதர்; மனைவியின் கனத்தில் பாதிகூடத் தேறாதவர். ஆனாலும் அவளை விட தாம் உயரம் என்று மனதைத் திடப்படுத்திக் கொள்பவர். இப்போது எழுந்து நின்றே கத்தினார்:
"தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளினாளாம், எவளோ ஒரு மூதேவி. அவனைத் தொரத்துனது நீ. அவனும் அப்பன் மாதிரி ரோஷம் கெட்டவனா இருப்பான்னு நீ எப்படி நினைக்கலாம்?”
மிஸ்டர் ரமணன் மட்டும் அங்கே இல்லையானால், பாக்கியம் சுப்பையாவை இந்நேரம் உப்பு வைத்து ஊறவைத்திருப்பாள். பிளட் பிரஷர்க்காரர். அப்படியும் பொறுக்க முடியாமல், அவருக்குத் தனியாக டோஸ் கொடுக்க நினைத்து “ஏங்க, கொஞ்சம் இந்தப் பக்கம் வறீங்களா” என்றாள் பணிவாக -மிகமிகப் பணிவாக. சுப்பையாவா கொக்கா, கண்டுக்கவில்லை. அவருடைய நீண்ட நாள் சிறைபட்ட உணர்வுகள், இப்போது விடுதலை வேகத்தில்