வந்து, குடும்பத்தாரோடு பொதுப்படையாகப் பேசி, அதனாலேயே மண்ணுக்குள் வேராய் மண்டிக் கிடந்த அவளின் காதல் அல்லது நேசம் இப்போது சம்பிரதாயத் தடையை மீறி வெளிப்படப் போவது போல் இருந்தது. மனதுக்குள் தன்னை அறியாமலே பற்றாக்குறையாய் இருந்த ஒரு வேற்றிடம் இப்போது பற்றாலும் பாசத்தாலும் இட்டு நிரப்பப்பட்டது போன்ற ஒரு புதுச்சுமை. அந்த சுமையிலும் ஒரு சுவை.
பாமா, உதடுகளை சுவைப்பது போல் கடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். இனம் தெரியாத ஒன்றுக்கு இனம் கிடைத்த ஏகாந்தம். அரூபமாய் நின்ற உணர்வை ரூபப்படுத்துவது போன்ற திருப்தி, பெண்மையின் மென்மையை அன்றுதான் அடையாளம் கண்டது போன்ற ஒரு பரவசம்.
"அந்த ஊமன் ரவுடிக்கு போலீஸ் இன்ஃபுளூயன்ஸ் அதிகமாக இருக்கும்போலத் தோணுது. போலீஸ், இளங்கோவை விட்டு வைக்க மாட்டாங்கனு நினைக்கிறேன். கற்பழிப்பு முயற்சின்னு போலீஸ் சொல்லிட்டால், அப்புறம் நம்ம பக்கமே யாருமே நிக்க மாட்டாங்க. இப்பவே நாம் ஏதாவது செய்தாகணும்.”
ரமணன் யோசிப்பவர் போல், தலையை சொறிந்தபோது, பாக்கியம் ஒப்பாரி போடாத குறையாகக் கேட்டாள் :
"அய்யய்யோ... என் பிள்ளை உள்ளே போயிடுவானா? இந்த போலீஸ்காரனுங்க அட்டூழியத்த அடக்க ஆள் இல்லையா? என் மகனுக்குக் கெட்ட பேரு வந்தால், இவளுக்கும் ஒரு கல்யாணம் நடக்காதே.”
இதுவரை எந்த உணர்வையும் காட்டாமல் மாத நாவல் பாத்திரங்களை மனதில் திரையிட்டுக் கெண்டிருந்த மல்லிகா, லேசாய் கண்களைக் கசக்கினாள். பாமாதான், அப்பாவை சூடாகப் பார்க்க, அவர், வாய் திறந்தார்.
“வேலியே பயிரை மேயுது... நாடு முழுகம் மாமூல் நிலைமை இருக்கோ இல்லையோ, மாமூல்தனம் இருக்குது. இதனாலதான், என் பையன் அமெரிக்காவிலேயே எம்.பி.ஏ. படிச்சுட்டு அங்கேயே செட்டிலாயிட்டான்."